நோ தொப்பி.. நோ கூலிங் கிளாஸ்.. வேட்பாளர் படங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
சென்னை: வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வேட்பாளரின் புகைப்படம் தொப்பி மற்றும் கண்ணாடி அணியாமல் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இம்முறைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே பெயரில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே குழப்பத்தைத் தவிர்க்க, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருடன், புகைப்படத்தையும் ஒட்ட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வேட்பாளரின் புகைப்படம் எப்படி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. அதில், வேட்பாளர்கள் தொப்பி, கண்ணாடியை அணிந்த மாதிரியான புகைப்படங்களை இயந்திரத்தில் ஒட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கேரளாவைச் சேர்ந்தஎம்.ராஜகோபாலன் என்ற வேட்பாளர், தனது உடல் நிலை கருதியும், தனது தனித்துவமான அடையாளமாகவும் காணப்படும் தொப்பியுடன் உள்ள தனது புகைப்படத்தை இயந்திரத்தில் ஒட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, தவிர்க்க இயலாத காரணங்களால் கண்ணாடி மற்றும் தொப்பியுடன் கூடிய வேட்பாளரின் புகைப்படத்தை மின்னணு இயந்திரத்தில் ஒட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், அவை சாதாரண வகையில் இருக்கிறதா என்பதை தேர்தல் அதிகாரிகள் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காரணம் தொப்பி அல்லது கண்ணாடியில் வேட்பாளர் தங்களது சின்னம் அல்லது கட்சியை முன்னிறுத்தும் எழுத்தோ, சொற்களோ இருக்கலாம் என்ற சந்தேகம் தான்.
இது தொடர்பான சுற்றறிக்கையை தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.