பாமகவின் "அரசியல் கட்சி" அங்கீகாரம் ரத்து? தேர்தல் ஆணையம் முடிவெடுக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பாமகவுக்கான "அரசியல் கட்சி" அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் பாமக தனது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. அத் தேர்தலில் 5.23% வாக்குகளை அக்கட்சி பெற்றது. ஆனால் 6% வாக்குகள் அல்லது 2 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால்தான் மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும். அத்தேர்தலில் 3 எம்.எல்.ஏ.க்கள் பாமகவுக்கு கிடைத்ததால் மாநில கட்சி அங்கீகாரம் தப்பியது.
2014 லோக்சபா தேர்தலில் பாமக 1 இடத்தில் மட்டுமே வென்றது. அதன் வாக்கு சதவீதம் 0.4% ஆனது. இதனால் பாமக தனது மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பறி கொடுத்தது.
தொடர்ந்து அங்கீகாரம் இழப்பு
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டையும் பறி கொடுத்தது. மொத்தமாக 5.3% வாக்குகளையே அது பெற்றுள்ளது. 6% வாக்குகளும் இல்லை 2 எம்.எல்.ஏ.க்களும் இல்லை என்பதால் தொடர்ந்தும் மாநில கட்சி அங்கீகாரத்தை அது இழந்து இருந்தது.
பாமக அங்கீகாரம் ரத்து?
இந்த நிலையில் இந்தியன் மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவர் வாராகி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், மக்களிடையே சாதிரீதியான பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பாமகவின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட கோரியிருந்தார்.
மனுதாரர் கோரிக்கை
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கொள்கைக்கும், சமூகத்திற்கும் எதிராகச் செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் என மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் விளக்கம்
கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை சட்ட ஆணையம் தான் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து, பெற்றுத் தர வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவு
இதையடுத்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.