சசிகலாவை ஓரம்கட்டிவிட்ட எடப்பாடி.. போட்டுடைத்த வெற்றிவேல்!
எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை ஓரம்கட்டிவிட்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவை ஓரம்கட்டிவிட்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேலும் அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சயின் ஆதரவை தன்னிச்சையாக அறிவித்ததையும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் போட்டுடைத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு தரவேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார். டிடிவி தினகரனும், எம்பி தம்பிதுரையும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த நிலையில் முதல்வர் ஆதரவை அறிவித்ததால், சசிகலாவின் ஆலோசனைப்படியே பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக கருதப்பட்டது.
தலைமைக்கழகம் சசிதான்
இதையே லோக்சபா துணை சபாநாயகரான தம்பிதுரையும் கூறினார். தலைமைக்கழகம் என்பது சசிகலாதான். அவரது முடிவைதான் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தாக அவர் கூறினார்.
சசிகலா அறிவிப்பார்
இந்நிலையில் இன்று சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனை அவரது ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார் என்று கூறினார்.
செல்லாது செல்லாது..
மேலும் எடப்பாடி முதல்வராக இருக்கலாம் ஆனால் கட்சியில் சசிகலா, தினகரனுக்கு அடுத்துதான் அவர் என்றும் வெற்றிவேல் கூறினார். மேலும் பாஜகவுக்கு ஆதரவு என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது செல்லாது என்றும் வெற்றிவேல் கூறினார்.
ஓரம்கட்டப்பட்ட சசிகலா
இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி சசிலாவை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஆதரவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது சசிகலாவையும் எடப்பாடி தரப்பு ஓரம்கட்டியுள்ளது வெற்றிவேல் எம்எல்ஏ மூலம் அம்பலமாகியுள்ளது.