தருமபுரியில் 144 தடை உத்தரவு அமல்! தடையை மீறி திருமாவளவன் வருவதால் பதற்றம்!!
தருமபுரி நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் மற்றும் செல்லன் கொட்டாயை சேர்ந்த திவ்யா ஆகியோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் நத்தம் காலனியில் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருமண விவகாரத்தில் இளவரசன் திடீரென மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து ஜூலை 4-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த போலீசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
தடையை மீறும் திருமாவளவன்
இத் தடையை தாண்டி இளவரசன் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்து இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தருமபுரி மாவட்ட செயலாளர் ராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆட்சியர் விவேகானந்தனிடம் இதற்காக மனுவையும் கொடுத்துள்ளனர்.
இதனிடையே நத்தம் காலனியை சேர்ந்த சிலர் ஆயுத பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர்கள் இளவரசன் நினைவு நாளின் போது செல்லன் கொட்டாய் உள்ளிட்ட ஊர்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நத்தம் காலனி பகுதியில் வீடு வீடாக சோதனை நடத்தி போலீசார் 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
இதனால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடுக்கும் வகையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2 கம்பெனியை சேர்ந்த 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாயக்கன் கொட்டாய், செல்லன் கொட்டாய், நத்தம் காலனியை சுற்றியுள்ள ரோடுகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
தடையை மீறி யாரேனும் தருமபுரி மாவட்டத்துக்குள் நுழைய முயன்றால் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.