சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து சென்னையில் ஆலோசனை நடத்திய தேர்தல் அதிகாரிகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாத துவக்கத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை அளித்து வருவதுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இதுவரை 24 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் நாளை திருச்சியில் 8 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
அண்மையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 40 சதவீதம் பேர் போலி வாக்காளர்கள் என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் திமுக எம்.பி. கனிமொழி கடந்த திங்கட்கிழமை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து இது குறித்து புகார் மனு அளித்தார்.
ஜைதி மற்றும் தேர்தல் அதிகாரிகள் அடங்கிய குழு வரும் 10ம் தேதி சென்னை வருகிறது. அந்த குழு 10,11 ஆகிய தேதிகளில் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அரசு மற்றும் போலீ்ஸ் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளது.
முன்னதாக துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 பேர் சென்னை வந்து புதன்கிழமை லக்கானி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர். சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.