தேர்தலுக்குத் தயாராகும் தேர்தல் ஆணையம்.. தற்காலிக தாசில்தார் வேலைக்கு ஆள் தேடுகிறது!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் துணைத் தாசில்தார் மற்றும் 20 உதவியாளர் பணிக்கு தற்காலிகமாக அது ஆள் எடுக்கவுள்ளது.
தற்போதைய தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.
பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
20ம் தேதி ஆலோசனை
தேர்தல் தொடர்பாக வருகிற 20ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்நை வருகிறார்கள். தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
அதே 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிடவுள்ளார். தமிழகத்தில் 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் இருக்கின்றனர். 1-1-2016 அன்று 18 வயது பூர்த்தியானவர்களும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வெள்ளம் காரணமாக தள்ளிப் போனது
இருப்பினும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட கன மழை மற்றும் பெரு வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டதால், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
22ம் தேதி ஆன்லைனில் பார்க்கலாம்
20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில் 22ம் அந்தப் பட்டியலை இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும். அதிலும் வாக்காளர்கள் தங்களது பெயர் உள்ளதா என்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
தேசிய வாக்காளர் தினம்
மேலும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், திருத்தம் கோரியவர்களுக்கும் அன்று முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
வாக்குப் பதிவு இயந்திரங்கள்
தமிழகத்தில் பெரும்பாலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் மொத்தமாக 75,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். தற்போது தமிழகத்தில் 8000 இயந்திரங்கள்தான் உள்ளன. எனவே கூடுதல் இயந்திரங்கள் வெளி மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டு வருகின்றன. அவை வரத் தொடங்கி விட்டன.
தற்காலிக துணை தாசில்தார்
இதுபோக தேர்தல் பணிக்காக தற்காலிக ஊழியர்களை எடுக்கும் பணியையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 9 தற்காலிக துணைத் தாசில்தார்கள், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 20 உதவியாளர்கள் பணிக்கு அது விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
இப்பணிகளுக்கு ஓய்வு பெற்ற துணைத் தாசில்தார்கள், ஓய்வு பெற்ற உதவியாரகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட வருவாய் அதிகாரி (தேர்தல்கள்), சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டடம், சென்னை 3 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.