புதுக்கோட்டை அருகே வயலில் கிடந்த மின்வயரை மிதித்த விவசாயி பலி- அதிகாரிகள் மெத்தனம்
புதுக்கோட்டை மாவட்டம் அருகே வயலில் கிடந்த மின்வயரை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து பலியானார்.
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த வயரை விவசாயி ஒருவர் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆங்காங்கே வீடுகளை சுற்றியும், விவசாய நிலங்களை சுற்றியும் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.
கந்தர்வகோட்டையை சேர்ந்த வளவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயியான இவர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை காண தனது நிலத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரை அவர் கவனிக்காததால் அதன் மீது காலை வைத்தார். இதையடுத்து அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இதேபோல் சில தினங்களுக்கு முன்பு திருவாரூரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் நீர் தேங்கியுள்ள இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக நீர் சூழ்ந்த இடங்களில் மின்சாரத்தை துண்டிக்காமல் விட்டதால் உயிர் பலி ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.