தேர்தல் ஆணையத்தில் லாரி லாரியாக தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை திரும்பப்பெறுகிறது ஈபிஎஸ் அணி?
சசிகலாவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை திரும்பப்பெற செய்ய ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை: சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை திரும்பப்பெற ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல் வெடித்தப் பிறகு தனி அணியாக செயல்பட்டு வரும் ஒபிஎஸ் அணியினர் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என போர்க்கொடி துக்கினர்.
இதனை எதிர்த்து டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கட்சியை வழி நடத்த உரிமை உள்ளது என பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
லாரி லாரியாக பிரமாண பத்திரங்கள்
அப்போது சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எடப்பாடி அணியினர் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் செல்லும் என ஓபிஎஸ் அணிக்கு எதிராக லாரி லாரியாக பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
எதிராக திரும்பிய எடப்பாடி
ஈபிஎஸ் அணி தாக்கல் செய்ததில் பல போலி பிரமாண பத்திரங்கள் இருப்பதாக ஓபிஎஸ் அணி குற்றம் சாட்டியது. இந்நிலையில் ஈபிஎஸ் அணியினர் சசிகலா குடும்பத்திற்கு எதிராக திரும்பியுள்ளனர்.
சசிகலாவை நீக்கம்?
இன்று ஒரு முடிவோடு அதிமுக தலைமை கழகத்துக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரனுக்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இதேபாணியில் சசிகலாவையும் கட்சியில் இருந்து நீக்க ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரமாண பத்திரங்கள் வாபஸ்?
மேலும் சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை திரும்பப்பெறவும் ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என கூறப்படுவதால் ஈபிஎஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.