''உண்மை விசுவாசி தம்பி''.. ஒரு காலத்தில் அழகிரியிடம் உருகிக் கிடந்த எஸ்ஸார் கோபி!
மதுரை: மு.க.அழகிரியைச் சுற்றிச் சுற்றி வந்த முக்கிய ஆதரவாளர்தான் எஸ்ஸார் கோபி. இன்று அழகிரியை விட்டு ஸ்டாலின் பக்கம் போய் விட்டார்.
தான் மட்டுமல்லாமல் தனது தம்பிகளுக்கும் சேர்த்து அழகிரி மூலமாக பல லாபங்களைப் பார்த்தவர் கோபி. அதன் மூலம் கிடுகிடுவென உச்சத்திற்குப் போனவர் கோபி. ஆனால் அவரே அழகிரி முதுகில் குத்தி விட்டுப் போயுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆனால் இவரது விலகலை மதுரை அழகிரி அரசியலைப் புரிந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. காரணம், அழகிரியைச் சுற்றியுள்ள பலரும் இப்படி சமயம் கிடைக்கும்போது முதுகில் குத்தக் கூடியவர்கள்தான். அப்படிப்பட்டவர்கள்தான் அதிகம் பேர் அவரிடம் உள்ளனர் என்கிறார்கள்.
பல பதவிகள்
அழகிரி செல்வாக்குடன் திகழ்ந்த காலத்தில் தனது தம்பிகளுக்கும், தனக்கும் பல முக்கியமான பதவிகளை வாங்கி அனுபவித்தவர் கோபி.
எண்ணற்ற வழக்குகள்
எஸ்ஸார் கோபி மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. தா.கிருட்டிணன் கொலை வழக்கு, நில அபகரிப்பு வழக்குகள், ஆயுதம் வைத்திருந்த வழக்கு, மதுரை வில்லாபுரம் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கு என வழக்குகளின் பட்டியல் மிக நீளமானது.
அடிதடி தம்பிகள்
எஸ்ஸார் கோபிக்கு 2 தம்பிகள். மருது மற்றும் ஈ்ஸ்வரன். இவர்கள் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் குவிந்து கிடக்கின்றன.
தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தவர்
எஸ்ஸார் கோபி திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தவர். இவர் பி.எம்.மன்னன், கராத்தே சிவா, முபாரக் மந்திரி, ஊதல் பாண்டி என ஒரு குரூப்பே அழகிரியின் முக்கியப் புள்ளிகளாக வலம் வந்தவர்கள்.
லீலாவதி கொலை வழக்கில் சிக்கிய குடும்பம்
மதுரை வில்லாபுரத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொடூரமாக நடு ரோட்டில் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் எஸ்ஸார் கோபியின் தாய் மாமா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னன் மட்டும் பாக்கி
தற்போது பி.எம். மன்னன்தான் அழகிரியுடன் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் ஒரே தீவிர ஆதரவாளராக இருக்கிறார். மற்றவர்களில் பெரும்பாலானோர் போய் விட்டனர். அட்டாக் பாண்டி தலைமறைவாகி விட்டார், கொலை வழக்கில் சிக்கி.
கோபியின் சர்ச்சைக் கடிதம்
சில வருடங்களுக்கு முன்பு எஸ்ஸார் கோபியின் வீட்டில் போலீஸார் நடத்திய ரெய்டின்போது ஒரு கடிதம் சிக்கியது. அது அழகிரிக்கு, கோபி எழுதியதாகும். அதில் அழகிரியை விட்டு விலக விரும்புவதாக கோபி கூறியிருந்தது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலம் சீட் கிடைக்கதால் அதிருப்தி
முன்பு திமுக ஆட்சிக்காலத்தில் திருமங்கலத்தில் இடைத்தேர்தல் நடந்தபோது அதில் தான் போட்டியிட ஆசைப்பட்டார் எஸ்ஸார் கோபி. ஆனால் வேறு வேட்பாளர் போடப்பட்டதால் அவர் வெளிப்படையாகவே அழகிரியிடம் புலம்பியதாக கூறுவார்கள்.
மொத்தத்தில் அழகிரியின் நிழல் போல இருந்த கோபி இப்போது ஸ்டாலின் பக்கம் இளைப்பாறப் போய் விட்டார். அழகிரிக்கு இது பெரிதாக இல்லை என்று தோன்றலாம்.. ஆனால் நிச்சயம் நல்ல இழப்புதான் என்கிறார்கள்.