ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு மின்னணு இயந்திரம்தான்- ராஜேஷ் லக்கானி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களத்தில் 62 வேட்பாளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு மின்னணு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் நின்றாலும் வாக்கு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். வாக்கு சீட்டு முறை கொண்டு வரப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் தற்போதுவரை 8 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே வாக்குப்பதிவுக்கு இயந்திரம் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படாது என்பது தெரியவந்துள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதிமுக சார்பில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. ஒன்று பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி, இரட்டை மின் விளக்கு சின்னத்திலும், சசிகலா அணி சார்பில் அதிமுக அம்மா என்ற பெயரில் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுக்கள் வாபஸ்
இந்தத் தொகுதியில் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின்னர் 82 பேர் களத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 சின்னங்கள் பயன்படுத்தலாம். மேலும் நோட்டாவுக்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்படும்.
களத்தில் 62 பேர்
இதற்கிடையே முக்கிய வேட்பாளர்களுக்கு மாற்று வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்து இருப்பவர்கள் இன்று வாபஸ் பெற்றனர். அவர்கள் வாபஸ் பெற்ற பின்னர் 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். 3 மணியுடன் வேட்புமனுக்களை வாபஸ் பெறப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் களத்தில் 62 பேர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மின்னணு இயந்திரம் பயன்படுத்துவதில் சிக்கல் எழாது என்று கூறப்படுகிறது.
ராஜேஷ் லக்கானி
முன்னதாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் நின்றாலும் வாக்கு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். வாக்கு சீட்டு முறை கொண்டு வரப்படாது என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 62 பேர் களத்தில் உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.