வெளிநாடுகளில் மணம் பரப்பத் தயாராகும் மதுரை மல்லி...!
மதுரை: தமிழகத்திலேயே ஜியாகிரபிகல் இன்டிகேஷன் அதாவது ஜிஐ முத்திரையைக் கொண்ட ஒரே மலரான மதுரை மல்லிகைப் பூ, விரைவில் பல்வேறு வெளிநாடுகளில் மணம் பரப்பப் போகிறது. இதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளனவாம்.
தமிழ்நாடு வேளாண்மைத்துறை இதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது.
மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் மதுரையிலிருந்து மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியக் குழுவின் வருகை
இதுகுறித்து மதுரை மார்க்கெட் கமிட்டியின் செயலாளரான தவசிமுத்து கூறுகையில், மலேசியாவிலிருந்து அதிகாரிகள் குழு ஒன்று சென்னைக்கு வந்து இதுதொடர்பான ஆய்வு மற்றும் ஆலோசனயில் ஈடுபட்டது. இதையடுத்து மதுரை மல்லியை ஏற்றுமதி செய்யும் திட்டத்தை மாநில வேளாண்துறை வகுத்துள்ளது.
விவசாயிகளுடன் கலந்தாலோசித்து
இதுதொடர்பாக மதுரை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மல்லிகை விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும்.
கோவையிலிருந்து தேங்காய்
அதேபோல கோவையிலிருந்து தேங்காயும், திண்டுகல்லில் இருந்து கம்பு ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் திட்டமும் ஆய்வில் உள்ளது என்றார் தவசிமுத்து.
உத்தப்பநாயக்கனூரில் உட்கார்ந்து ஆலோசனை
மதுரை மல்லியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான அதிகாரிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான ஆய்வுக் கூட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரில் நடந்தது.
விவசாயிகளின் கூட்டமைப்பு உருவாகிறது
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, மல்லிகையை உற்பத்தி செய்யும் விவசாயிகள் இணைந்த ஒரு கூட்டமைப்பு, ஒரு நிறுவனம் போல தொடங்கப்படும். இந்த நிறுவனமே நேரடியாக விவசாயிகளிடமிருந்து மல்லிகையை கொள்முதல் செய்து விற்பனையும் செய்யும்.
புரோக்கர்களுக்கு இடமில்லை
இந்த நிறுவனம் முற்றிலும் விவசாயிகளாலேயே நிர்வகிக்கப்படும். விவசாயிகள் நேரடியாக தங்களது பூக்களை இங்கு விற்பார்கள். இடைத்தரகர்களுக்கு இங்கு இடமில்லை.
30 ஊர் விவசாயிகளுடன் ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் களத்தூர், உசிலம்பட்டி, மகாலிங்கபுரம், விநயாகபுரம் உள்பட 30 ஊர்களைச் சேர்ந்த விவசாயக் குழுக்களுக்கு மல்லிகை மலரின் ஏற்றுமதி குறித்த முக்கியத்துவம் தொடர்பாக விளக்கிக் கூறப்பட்டது.
மழையால் பாதிப்பு
கடந்த 2 வருடங்களாக மதுரை பக்கத்தில் மழை சரியாக இல்லாததால் மல்லி உற்பத்தி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 650 விவசாயிகள் மல்லிகையை முக்கியத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனராம். இவர்கள் சொந்த நிலங்களில் மல்லிகையைப் பயிரிடுகிறார்கள். இதுதவிர குத்தகை நிலங்களில் பயிரிடுவோர் எண்ணிக்கை தனி என்பது குறிப்பிடத்தக்கது.