500, 1000 ரூபாய் நோட்டுக்கு தடை எதிரொலி.. கள்ள நோட்டு தொழிலுக்கு சாவு மணி
அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் கள்ள நோட்டு தொழிலுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன்.
சென்னை: அண்மையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக கள்ள நோட்டு தொழிலுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதனை நாளொன்றுக்கு ரூ.4000 வீதம் வருகிற 24- ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார்.
இந்த நடவடிக்கை கள்ள நோட்டுக் கும்பலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுக்கள் தான் இந்தியாவில் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வந்தன. இந்நிலையில் அந்த நாட்டவர்கள் அதிகளவில் 50, 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட தீர்மானித்துள்ளதாகவும். அடுத்த ஒரிரு மாதங்களில் இந்திய புதிய நோட்டுக்களான 500, 2000 நோட்டுக்கள் போன்று பாதுகாப்பு அம்சங்கள் மிக்க புதிய நோட்டுக்களை அச்சிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பாகிஸ்தான் கள்ள நோட்டுக் கும்பலையும், தாவுத் இப்ராஹிம் போன்றவர்களையும் மாற்றி யோசிக்க வைத்துள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், அவர்களின் மொத்த முதலீடு விணாகி விட்டதால் அந்த கும்பல் 100 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு கள்ள சந்தையில் வெளியிட பல முறை யோசி்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 500,2000 ரூபாய் நோட்டுக்களில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எனவே, இனி மேல் கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட முடியாது.
இதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் ஒன் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, புதிய நோட்டுகள் மிகவும் கவனம் செலுத்தி பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின் அச்சிடப்பட்டுள்ளது. எனவே அந்த பணத்தாள்கள் போன்ற கள்ள நோட்டுக்கள் அடிப்பது கடினம். அதில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்றார் அவர்
பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இல்லை. எனவே அவற்றை போன்று கள்ள நோட்டுக்களை பாகிஸ்தானியர்கள் எளிதாக அச்சிட்டு வந்தனர். அவர்கள் இந்தியா எங்கிருந்து பணத்தாள்களை வாங்கியதோ அங்கிருந்து பணத்தாள்களை வாங்கி எளிதாக கள்ள நோட்டுக்களை அச்சிட்டனர்.
இதனால், இந்திய சந்தையில் அவர்கள் கள்ள நோட்டுக்களை எளிதாக புழக்கத்தில் விட முடிந்தது. இந்திய பொருளாதாரமும் பெரும் சவால்களைச் சந்தித்தது. இனிமேல் இதுபோன்ற அத்துமீறல்களில் அந்த நாட்டினர் ஈடுபடுவது இயலாது. அந்த அளவுக்கு புதிய நோட்டுக்களில் பாதுகாப்பு அசம்சங்கள் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது.