கட்டிட வேலை...ஹோட்டல் ஊழியர்கள் மூலம்- பாகிஸ்தானில் அச்சடித்த கள்ள நோட்டு புழக்கம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கள்ளநோட்டு வழக்குகள் குறைந்திருந்தாலும் பாகிஸ்தானில் இருந்து அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் வங்காளதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவிற்குள் கடத்தி வரப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் புழக்கத்திற்கு விடப்படுகிறது. மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புவது போல அனுப்பி அவர்கள் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகிறது.

தமிழகத்திற்குள்ளும் கட்டிட வேலை செய்பவர்கள் போலவும், ஹோட்டலில் வேலை பார்ப்பவர்கள் போலவும், பிளாட்பாரங்களில் கடைபோட்டு துணி விற்பவர்கள் போலவும் கள்ளநோட்டு கும்பல் ஊடுருவி வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு விடுகின்றனர். ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை பெரும்பாலும் புழக்கத்தில் விடுகிறார்கள். தமிழகத்தில் கள்ள நோட்டு கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது வேட்டை நடத்துகிறார்கள்.
சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை நகர போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆதரவு உளவாளிகள் ஜாகீர் உசேன் உள்பட 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்கள் மீது தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு வழக்குகளில் கைதானவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications