தி.நகர் சென்னை சில்க்ஸ்சில் 2வது நாளாக அணையாமல் எரியும் தீ.... துண்டு துண்டாக சிதைந்த கட்டிடம்!
தி. நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி நிறுவனத்தில் 2வது நாளாக தீ பற்றி எரிகிறது. பல கோடி ரூபாய் பொருட்களுடன் கட்டிடம் துண்டு துண்டாக நொறுங்கியுள்ளது.
சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் நேற்று அதிகாலையில் பற்றிய தீ இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள், தங்க நகைகள் எரிந்து சாம்பாலாகி விட்டது. கட்டிடம் துண்டு துண்டாக சிதைந்து விட்டது.
2006 ஆம் ஆண்டே சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் படிப்படியாக இடிப்பது போல போக்கு காட்டி சட்டத்தின் சந்து பொந்துக்குள் நுழைந்து வந்த உரிமையாளர்கள் கட்டிடத்தை மீண்டும் கட்டி விட்டனர். 11 ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டிடம் நெருப்பிற்கு இரையாகிவிட்டது.
சென்னை சில்க்ஸ்
தி. நகர் உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7 மாடி கட்டிடத்தின் வழியாக சென்றாலே ஏசி காற்று வரவேற்கும். ஸ்ரீகுமரன் தங்கமாளிகை, சென்னை சில்க்ஸ் என இரண்டு நிறுவனங்களுமே ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடத்தில் நேற்று அதிகாலை தரை தளத்தில் பற்றியது தீ.
அணையாத தீ
நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயின் நாக்குகளை நசுக்க முடியவில்லை. ஆக்ரோசமாக பற்றி பரவிய தீ சென்னை நகரத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. முதலில் அடித்தளத்தில் பற்றிய தீ, படிப்படியாக மற்ற தளங்களுக்கும் பரவியது.
7 தளங்களிலும் பற்றியது
அந்த கட்டிடத்தில் உள்ள 7 தளங்கலிலும் தீ பற்றியது. ஒரே புகை மூட்டமானதால் தீயணைப்பு வீரர்களால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியவில்லை. ரசாயனப் பவுடர் மூலம் தீயை அணைக்க முயன்றனர். அதில் சற்று தீயின் தாக்கம் குறைந்தாலும், கடையின் உள்ளே ஏராளமான துணிகள் இருப்பதால், தீ மேலும் பரவி, கொளுந்து விட்டு எரிந்தது.
தண்ணீர் தட்டுப்பாடு
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான லாரிகளின் மூலம் தண்ணீர் பயன்படுத்தியும் தீயை அணைக்க முடியாமல் திணறித்தான் போயினர். விடிய விடிய தீயை அணைக்க போராடியும் கோரத்தாண்டமாடிய தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதிகாலை முதலே படிப்படியாக கட்டிடங்கள் சிதைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ருசித்து சுவைத்த தீ
பொன் நகைகள், ஜவுளிகள் என அனைத்தையும் சுவைத்து கபளீகரம் செய்தது தீ. சென்னையில் ஒரு முறை நீரினால் பாதிப்பு என்றால், மற்றொரு முறை புயல் காற்றினால் பாதிக்கப்பட்டது. இப்போதோ அணையாத அக்னியால் தியாகராயநகர் பாதிக்கப்பட்டுள்ளது.
இயற்கையா? செயற்கையா?
27 மணி நேரத்திற்கும் மேலாக தீயின் கோரத்தாண்டவத்தை தாக்க முடியாமல் பல கோடி ரூபாய் மதிப்பு மிக்க பொருட்களுடன் துண்டு துண்டாக சிதைந்து போய் விட்டது சென்னை சில்க்ஸ் கட்டிடம். விதிமீறல் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆக்கிரமித்து கட்டினர், அவர்கள் விட்ட சாபம்தான் இப்படி நெருப்பில் கருகிவிட்டது என்கின்றனர். இது இயற்கை பேரிடரா? செயற்கை பேரிடரா? என்று சந்தேகம் எழுப்புகின்றனர் சிலர்.
சப்பைக்கட்டு
நாங்க அப்பவே சீல் வைத்தோம்... ஆனால் அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்காடி மீண்டும் திறந்து விட்டனர் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். அத்தனை நெருக்கடியான இடத்தில் பாலம் கட்டலாமா என்று கேட்கின்றனர் சிலர். ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது என்கின்றனர் அதிகாரிகள். எது எப்படியோ பரபரப்புக்கு பஞ்சமில்லாத தி. நகரில் சென்னை சில்க்ஸ்சில் தீ பற்றியதால் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
கருகி போன கட்டிடம்
மே 30ஆம் தேதிவரை கம்பீரமாக தி. நகர் உஸ்மான் சாலையில் நின்று கொண்டிருந்த கட்டிடம் இன்று நெருப்பில் கருகி காணாமல் போய்விட்டதுதான் சோகம். தீ கட்டுப்படுத்தப்பட்டது என்று நம்பிய நேரத்தில் மீண்டும் பற்றி எரிந்தது தீ. எப்போது அணையும் என்பது யாராலும் கூற முடியவில்லை. உஸ்மான் சாலையில் நடந்து செல்பவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு இந்த இடத்தில்தான் சென்னை சில்க்ஸ் இருந்தது, தீ விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது என்று சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டு விட்டது.