தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக.... ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் வெளிநடப்பு
தமிழக சட்டசபை வரலாற்றிலேயே ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்வது இதுவே முதல்முறையாகும்.
சென்னை: தமிழக சட்டசபையிலிருந்து அதிமுக எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து சட்டசபை வரலாற்றிலேயே ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெளிநடப்பு செய்தது இதுவே முதல் முறை என்ற சாதனையை படைத்து விட்டார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த கடந்த 14-ஆம் தேதி சபை கூடியது. முதல் நாளிலேயே கூவத்தூர் பேரம் குறித்த விவகாரத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின.
எனினும் சபாநாயகர் தனபால் அந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்கவில்லை. மேலும் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றார். இந்த விவகாரத்தால் அமளியில் ஈடுபட்ட திமுக வெளியேற்றப்பட்டதும் , அதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்ததும் நடைபெற்றது.
மானியக் கோரிக்கை
இந்த நிலையில் உயர் கல்வித் துறை, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றன. பள்ளிக் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை இன்று சட்டசபையில் நடைபெற்றது.
அனுமதி மறுப்பு
மேலும் சுகாதாரத் துறை குறித்து கேள்வி எழுப்ப அனுமதி வழங்குமாறு தினகரன் ஆதரவாளரும், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ-வுமான தங்கதமிழ் செல்வன் கேட்டார். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனால் தங்கதமிழ் செல்வன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
முதல் முறையாகும்
சட்டசபை வரலாற்றிலேயே ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெளிநடப்பு செய்வது இதுதான் முதல்முறையாகும். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார்.
கட்சி டிடிவி-க்கு
கடந்த சில தினங்களுக்கு முன், முதல்வரை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 35 பேர், கட்சி தினகரனுக்கு என்றும் ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினர். மேலும் கட்சி சார்பில் நடத்தப்படும் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு தினகரனை தலைமை தாங்க அழைக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தினர்.
இப்தாருக்கு அழைப்பில்லை
ஆனால் தினகரனுக்கு எடப்பாடி கோஷ்டியினர் அழைப்பு விடுக்கவில்லை. இதிலிருந்து கட்சியில் தினகரனின் தலையீட்டை அந்த கோஷ்டி விரும்பவில்லை என்றே தெரிகிறது. இதனால் முதல்வரை அவமானப்படுத்தும் வகையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் தங்கதமிழ் செல்வன்.