மீனவர் கொலைக்கு கடிதம் எழுதுவதால் மட்டுமே பயன் கிடைத்துவிடாது - முத்தரசன்
மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு கடிதம் எழுதுவதால் மட்டுமே பயன்கிடைத்து விடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மீனவர் படுகொலைக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதால் மட்டுமே மீனவர்கள் பிரச்சினை தீர்த்து விட முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லைப்பகுதியான ஆதம்பாலம் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தமிழக மீனவர் பிரிட்சோ பரிதாபமாக உயிரிழந்தார். மீனவர்கள் படுகாயமடைந்தனர். இலங்கை கடற்படை ஏகே 47 ரக துப்பாக்கியால் தமிழக மீனவர்களை சுட்டுக்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த படுகொலை சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய மீனவர்களை குறிப்பாக தமிழக மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்படை தவறி வருவதாக குற்றம் சாட்டினார்.
தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்தான் என்பதை மத்திய அரசு உணரவேண்டும் என்று கூறிய அவர், தமிழக அரசு மெத்தனப்போக்குடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர், தமிழக முதல்வர் இதுவரை எத்தனையோ கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். மீனவர்கள் பிரச்சினைக்கு கடிதம் எழுதுவதால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்பட்டு விடாது என்று கூறியுள்ளார்.
இதே போல மீனவர்கள் படுகொலை குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேசிய பழ. நெடுமாறன், இந்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறி வருவதாக குற்றம் சாட்டினார்.