உயிரைப்பற்றி கவலைப்படவில்லை... உண்ணாவிரதம் தொடரும்: இடைநிலை ஆசிரியர்கள் உறுதி
சென்னை: உயிரே போனாலும் கவலையில்லை, கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுடன் வேலைபார்க்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம்கோரி டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் நாங்கள் கேட்கவில்லை. அனைவரும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கவேண்டும் என்பதுதான் தங்களின் கோரிக்கை என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்.
ஆண்கள் மட்டுமல்லாது பெண் ஆசிரியைகளும், குழந்தைகளுடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் பலர் மயக்கம் அடைந்த நிலையிலும் இவர்களின் உண்ணாவிரதம் நீடிக்கிறது. மயக்கம் அடைந்துள்ள ஆசிரியர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.
உண்ணாவிரதம் இருந்த மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் நேற்று மயக்கம் அடைந்தார். அதனால் அவரை 108 ஆம்புலன்சில் அழைத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர் பிடிவாதமாக ஆம்புலன்சில் ஏற மறுத்துவிட்டார்.
எனவே அவருக்கு உண்ணாவிரதம் இருந்த இடத்திலேயே குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர்கள், தங்களின் குமுறலை வெளிப்படுத்தினர். 31-05-2009ம் தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8 ஆயிரத்து 370 என்றும், அதற்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5 ஆயிரத்து 200 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் நாங்கள் அந்த இடைநிலை ஆசிரியர்களை விட ரூ.3 ஆயிரத்து 170 அடிப்படை சம்பளத்தில் குறைவாக வாங்குகிறோம்.
இவ்வாறு ஒரு மாநிலத்திலேயே சம்பளத்தில் முரண்பாடு உள்ளது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் நாங்கள் கேட்கவில்லை. இந்த கோரிக்கைக்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விட்டோம். பள்ளிக்கல்வி முதன்மை செயலாளரை பார்த்து முறையிட்டோம். ஆனால் எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை.
இனிமேல் 7வது ஊதியக்குழு வர உள்ளது. அது அமல்படுத்தும்போது ஏற்கனவே உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் எங்களுக்கும் சம்பளத்தில் அதிக வித்தியாசம் ஏற்படும். எனவே அதற்குள்ளாக எங்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். இதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதுவரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று கூறிய ஆசிரியர்கள் உயிரைப்பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவித்தனர்.