குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை- எஸ்.பி. ஆய்வு
சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளம் காரணமாக மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழக கேரளா எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான நெல்லைமாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழையின் காலமான ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாகும். அருவிகளின் நகரமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி,ஐந்தருவி,பழையக்குற்றால அருவி,புலியருவி,உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த இந்த சீசன் நாட்களில் சுமார் 60இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான செங்கோட்டை,புளியரை, குண்டாறு,மேக்கரை,குற்றாலம்,ஐந்தருவி,உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சிலநாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் மற்றும் ஐந்தருவி,பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியது.
சீசன் தொடங்கியதை அடுத்து குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
குற்றாலத்தில் உள்ள மெயின்அருவி,ஐந்தருவி,பழைய குற்றாலம் அருவி,புலியருவி,உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தப் போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளம் ஏற்ப்பட்டது.
இதன் காரணமாக எச்சரிக்கை சைரன் ஒளிக்க விடப்பட்டு சுற்றுலாப் பயணிகளை போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றினர். குற்றால சீசன் ஆரம்பித்த 4 தினங்களில் 2வது முறையாக வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை தினமான இன்று குற்றாலம் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
எஸ்.பி. ஆய்வு
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமன், சுற்றுலாப்பயணிகள் வரிசைப்படுத்தி குளிப்பதற்கு தடையில்லாமல் வழுக்கி விழாமல் பாதுகாக்கவும் காவல்துறையினர் பணியில் உள்ளனர் இதெற்கென ஒரு கம்பெனி காவல்படை வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
விழிப்புணர்வு பயனர்கள்,பெண்களை படம் எடுப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும், உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற போன வருடமே சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டன அதே போல் இந்த வருடமும் சிசி டிவி மூலம் அனைத்து அருவிகளையும் கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது
அச்சமின்றி சுற்றுலாப்பயணிகள் வந்து குறிக்கலாம்,உயர் நீதி மன்ற உத்தரவுகளை கடுமையாக பின்பற்றப்படும் என தெரிவித்தார்.