சுஷ்மா ஸ்வராஜ் நேரில் வரும் வரை பிரிட்ஜோவின் உடலை பெற மாட்டோம்... மீனவர்கள் திட்டவட்டம்!
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் வந்து உறுதி அளிக்கும் வரை பிரிட்ஜோவின் உடலை பெற மாட்டோம் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் 2-ஆவது நாளா
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் வந்து உறுதி அளித்தால்தான் பிரிட்ஜோவின் உடலை பெறுவோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடற்பரப்பில் 6 மீனவர்கள் திங்கள்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை ஏதும் விடுக்காமல் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதில் கழுத்தில் குண்டு பாய்ந்து பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். சரோன் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் அட்டூழியங்களுக்கு தீர்வு கிடைக்கு்ம வரை பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பிரிட்ஜோவின் தாயார் கூறுகையில், என் மகனை கொன்ற இலங்கை கடற்படை வீரரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சிறை வைக்கும் வரை எத்தனை நாள்கள் ஆனாலும் எங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரமாட்டோம். எங்களுக்கு அரசு நிதியுதவியும் வேண்டாம், வேலைவாய்ப்பும் வேண்டாம், நியாயம் கிடைக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் வந்து எங்களுக்கு உறுதி தரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.