ஐடி துறையில் அநியாய பணி நீக்கம்.. மத்திய, மாநில அரசு தலையிட ஊழியர் கூட்டமைப்பு கோரிக்கை
சென்னை: ஐடி துறையில் தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்வதை தடுக்க மத்திய மற்றரும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ஐடி ஊழியர்கள் கூட்டமைப்பு (F.I.T.E) கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ்ஸ நிறுவனத்தின் 10 ஊழியர்கள் சார்பாக, F.I.T.E மூலம், சென்னையிலுள்ள தொழிலாளர் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் காக்னிசன்ட் நிறுவன நிர்வாக்துடன் கடந்த 18ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தொழிலாளர் துறை கடைசி நேரத்தில் அறிவித்ததால், குறைந்த அளவு ஊழியர்களே பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
மே 22ம் தேதி தொழிலாளர் துறை 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்திருந்தது. இதில் காக்னிசன்ட் நிறுவனத்தின் சுமார் 10 ஊழியர்கள், F.I.T.E அமைப்பின் பொதுச்செயலாளர் வினோத் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் அதிகாரிகளோ, மனு மமற்றொரு அதிகாரிக்கு மாற்றல் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் அந்த அதிகாரியின் பெயர் விவரங்களை கூட தரவில்லை.
இழுபறிக்கு பிறகு மே 24ம் தேதி அடுத்த ஆலோசனை கூட்டத்திற்கு சம்மதித்துள்ளது தொழிலாளர் துறை. பணி நீக்கம் காரணமாக ஐடி துறையில் பல ஊழியர்கள் வேலை இழந்து வருகிறார்கள். ஐடி துறை ஆரோக்கியமாக இல்லை. இந்த நிலையில், தமிழக தொழிலாளர் நலத்துறையிடம் துரிதமான செயல்பாட்டை எதிர்பார்க்கிறோம். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை ஆயிரக்கணக்கான ஐடி தொழிலாளர்களை பாதிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.