திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கோயம்பேடு கடைகளுக்கான ஒதுக்கீடு ரத்து: ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை, கோயம்பேடு சந்தையில், திமுக ஆட்சி காலத்தில் அமைச்சரின் விருப்ப ஒதுக்கீட்டின்படி, 26 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கே.கார்த் திகேயன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
கோயம்பேடு சந்தையில் கடந்த 2009-10-ம் ஆண்டில் 26 கடைகள் ஒதுக்கப்பட்டன. அப்போதிருந்த அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) தலைவர் (பரிதி இளம்வழுதி), சிஎம்டிஏவின் தலைவர் என்ற முறையில் அவரது விருப்ப ஒதுக்கீட்டின் அடிப்படையில் அதை வழங்கி இருக்கிறார். ஆனால், அதில் சட்ட வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. எனவே அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாரயணன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்து பிறப் பித்த உத்தரவு:
சிஎம்டிஏ தலைவரின் விருப்ப ஒதுக்கீடு என்பது தவிர கடை ஒதுக்கீட்டில் எந்தவொரு வழிமுறையும் பின்பற்றப்படவில்லை. தகுந்த விளம்பரம் செய்து, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகவல் கொடுத்து, கடைகளை ஏலத்துக்கு விட்டு, கடைகளை ஒதுக்கினால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு எற்படும்.
எனவே அந்த 26 கடைகளை, தகுந்த சுற்றறிக்கை விட்டு ஏலம் விடுவதற்கான புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனை 2015-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இந்த வழக்கில், மனு மற்றும் மேல் முறையீட்டு மனுக்களை முடித்து வைக்கிறோம். ஏற்கெனவே அந்த 26 கடைகளுக்காக யாராவது முன்பணம் கொடுத்திருந்தால், அத்தொகையை 15 நாட்களுக்குள் வட்டியுடன் திரும்பித் தர வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.