ஜெயலலிதா கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலி - ஜி.ஆர் கண்டனம்
சென்னை: ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் உயரிழந்ததை மூடி மறைக்கும் வகையில் உடல் நலக்குறைவின் காரணமாகத்தான் இருவரும் இறந்தனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விருதாச்சலம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் காத்திருந்ததால் பலர் மயக்கமடைந்தனர்.
சுமார் 5 மணி நேரம் கழித்து ஜெயலலிதா மேடைக்கு வந்து பிரச்சாரம் தொடங்கிய போது கூட்டத்திலிருந்த பலர் வெயிலைத் தாங்க முடியாத நிலையில் தேவையான குடிநீருக்கும் ஏற்பாடு செய்யப்படாத சூழலில் மிகுந்த அவதிக்குள்ளாகி வெளியேற முற்பட்ட போது நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில் பெண்கள் உட்பட 19 பேர் மயக்கமடைந்த நிலையில், மிகவும் தாமதமாகவே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் முதல் உதவி, மருத்துவ வசதி சரியாக கிடைக்கப்பெறாத சூழலில், இரண்டு பேர் மிகப்பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதை மூடி மறைக்கும் வகையில் உடல்நலக்குறைவின் காரணமாகத்தான் இருவரும் இறந்தனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மேலும் மருத்துவமனையிலுள்ள பலர் ஆபத்தான நிலையிலிருப்பதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையோடு மெத்தனப்போக்குடன் நடந்து கொண்ட தேர்தல் ஆணையமும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
போதுமான குடிதண்ணீரும், முதல் உதவிக்கான ஆம்புலன்ஸ் வசதியும் செய்து தராமல் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணமான அனைவர் மீதும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை அதிமுக வழங்க வேண்டும்.
இனி வருகின்ற நாட்களில் தேர்தலுக்கான பிரச்சார கூட்டங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஏற்பாடுகளை உத்தரவாதப்படுத்த காவல்துறையும், அரசு நிர்வாகமும் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.