கட்டிட விபத்து: அடையாளம் காண முடியாத 13 உடல்களுக்கு மரபணு சோதனை
சென்னை: சென்னை கட்டிட விபத்தில் கட்டிட விபத்தில் உயிரிழந்த அடையாளம் காண முடியாத உடல்கள் மரபணு சோதனை மூலம் (டி.என்.ஏ) அடையாளம் காணப்படும் என ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிம்முடி மிர்னாலினி தெரிவித்தார்.
போரூரை அடுத்த மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 61 பேர் உயிரிழந்து விட்டனர். பலியானவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த விபத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணி 6-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது. இதனை ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிம்முடி மிர்னாலினி வியாழக்கிழமை காலை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து நடத்த 11 மாடி கட்டிடத்தில் ஆந்திர மாநிலம் விஜயநகரம், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 70 முதல் 100 பணியாளர்கள் வரை வேலை பார்த்து வந்ததாகத் தெரிகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 51 பணியாளர்கள் வியாழக்கிழமை காலை வரை மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவருக்கு மட்டும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய 39 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 26 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 18 உடல்கள் புதன்கிழமை ஊறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இன்னும் 13 உடல்கள் அடையாளம் காணமுடியாமல் மருத்துவமனையில் உள்ளது.
அந்த உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதால் அடையாளம் காண முடியாமல் உள்ளது. இந்த உடல்கள் உறவினர்கள் மூலம் அடையாளம் காண முடியாத சூழலில், மரபணு சோதனை (டி.என்.ஏ.) மூலம் அடையாளம் காணப்படும். இது குறித்து மருத்துவர்கள் மற்றும் அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கிம்முடி மிர்னாலினி கூறினார்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் 60 உடல்களை வைப்பதற்குதான் இடவசதி உள்ளது. ஏற்கனவே அங்கு சாலை விபத்து, தற்கொலை என பல்வேறு காரணங்களால் இறந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணமுடியாமல் உள்ளது.
இதனால் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து இதுவரை 26 உடல்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.