குழந்தையை தாக்கிய செஞ்சி பெண்ணின் கள்ளக்காதலன் கைது.. பிரேம்குமார் என்ற பெயரில் அறிமுகமான மணிகண்டன்
அறந்தாங்கி: செஞ்சியில் குழந்தையை தாக்கிய பெண்ணின் கள்ளக்காதலனை தனிப்படை போலீஸார் அறந்தாங்கியில் கைது செய்தனர். இந்த மணிகண்டன் தன்னை பிரேம்குமார் என கூறியே துளசியிடம் பேசியுள்ளார். இவர் எதற்காக துளசியிடம் தனது பெயரை மாற்றிக் கூறினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்த நிலையில் ஊரடங்கால் வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார்.

செல்போன்
அப்போது துளசியின் செல்போனை எடுத்து பார்த்த போது ஒன்றரை வயதுள்ள இரண்டாவது மகனை சரமாரியாக தாக்கி அதை வீடியோவாகவும் துளசி பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் குழந்தையை கொடூரமாக தாக்கிய துளசி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

துளசி கைது
இதையடுத்து சித்தூரில் இருந்த அந்த பெண் துளசியை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். இதையடுத்து முதலில் அந்த பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு அவர் இது போல் குழந்தையை தாக்கினார் என கூறப்பட்டது. ஆனால் அவருக்கும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததை துளசியின் கணவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதலை விட முடியாத நிலை
இதையடுத்து துளசியை மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவருக்கு மனநலம் நன்றாக இருப்பதாக மருத்துவர் சான்றிதழ் அளித்தார். இதையடுத்து அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் குறித்து ஒப்புக் கொண்டார். மேலும் கள்ளக்காதலை விட முடியாததால் கணவர் மேல் இருந்த கோபத்தில் குழந்தையை தாக்கியதாக கூறினார்.

குழந்தையை தாக்கி வீடியோவாக எடுத்த துளசி
மேலும் குழந்தையை தாக்கி அதை வீடியோவாக எடுத்து கள்ளக்காதலனுக்கு அனுப்பி வைத்ததாகவும் பகீர் தகவலை தெரிவித்தார். இதையடுத்து கள்ளக்காதலன் மணிகண்டனை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் அறந்தாங்கியில் உள்ள தனது சித்தியின் மகன் வீட்டில் இருப்பதை அறிந்த போலீஸார் அவரை கைது செய்து விழுப்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications