டூட்டி ஓவரு... இதுக்கு மேல ரயில் ஓடாது.. பாதியில் பேக்கப்பான டிரைவர்.. நல்லகாலம் இவர் பைலட் இல்ல!
திருச்சி: தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி சரக்கு ரயிலை நடுவழியில் டிரைவர் நிறுத்திவிட்டதால் சுமார் 11 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 41 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டது. அவை வழக்கத்துக்கு மாறாக 5 மணி நேரம் தாமதமாக சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பொள்ளாச்சிக்கு கிளம்பியது.
இந்நிலையில் ரயில் மாதுளம்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்த போது டிரைவர் ரயிலை நிறுத்திவிட்டார். பின்னர் தனது பணி நேரம் முடிவடைந்து விட்டதால் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டார். மேலும் மாற்று டிரைவரை ஏற்பாடு செய்யுமாறு கோரினார்.
அதிகாரி பேச்சுக்கு மறுப்பு
இதையடுத்து ரயிலை எடுத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு சென்றுவிடுங்கள். அங்கு மாற்று டிரைவர் வருவார் என்று ரயில் நிலைய அதிகாரி கூறினார். எனினும் அவர் கூறியதை கேட்காத அந்த டிரைவர் ரயிலை தண்டவாளத்தில் பொதுமக்கள் கிராஸ் செய்யும் இடத்தில் நிறுத்திவிட்டு நடையை கட்டினார்.
கும்பகோணம்
ரயில்வே கிராஸிங்கின் குறுக்கே ரயிலை நிறுத்திவிட்டதால் இருபுறமும் கேட் திறக்கப்படவி்லை. இதனால் சக்கோட்டை மற்றும் நாச்சியார்கோவில் பகுதி மக்கள் கும்பகோணத்தை அடைய முடியவில்லை.
மாற்று பாதை
அதே நேரம் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு மற்ற ரயில்கள் வரவில்லை. இதனால் பொதுமக்கள் கூடுதலாக 4 கி.மீ. தூரம் கொண்ட மாற்று பாதையில் கும்பகோணத்துக்கு சென்றனர்.
பொதுமக்கள் முணுமுணுப்பு
கும்பகோணம் ரயில் நிலைய மேலாளர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்துக்கு நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து மாற்று டிரைவர் சம்பவ இடத்துக்கு மதியம் 2 மணிக்கு வரவழைக்கப்பட்டு ஒருவழியாக ரயில் எடுக்கப்பட்டது. இதனால்11 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நல்ல வேளை இவர் பயணிகள் ரயில் அல்லது விமானி இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என பொதுமக்கள் கிண்டலாக பேசிக் கொண்டனர்.