"மழை வருது.. மழை வருது... குடை கொண்டு வா".. இது அரசு பேருந்து ஓட்டுநர்களின் கவலை!
சென்னை: ஆளாளுக்கு ஒரு பீலிங் என்பது போல், மழைக்காலம் வருகிறது என்றால் ஆளாளுக்கு ஒரு கவலை காளான் போல முளைத்து விடுகிறது.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை கற்றுத் தந்த பாடத்திலிருந்து இம்முறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் மக்கள். இம்மாதம் 20ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், மழையை எதிர்கொள்ள மக்களும் முன்னேற்பாடுகளுடன் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், மழையால் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு வித்தியாசமான சவால் காத்திருக்கிறது.
சாகசப் பேருந்துகள்...
அதாவது அரசு பேருந்துகளில் பெரும்பாலானவை ஓட்டை ஒடிசல்களுடன் பரிதாபகரமான நிலையில் உள்ளன என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். ஓடும் பேருந்தில் படிக்கட்டுகள் கழன்று விழுந்தது, சக்கரம் உருண்டு ஓடியது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணமே உள்ளன.
மேற்கூரைகளில் ஓட்டை...
இவை ஒருபுறம் இருக்க, பல பேருந்துகளில் பயணிகள் சுகமாக காற்று வாங்கியபடி செல்ல, ஜன்னல்கள் தவிர்த்து மேற்கூரையிலும் பல துளைகள் உள்ளன. இவற்றைச் சரி செய்யாமலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துக்குள் குடை...
இதனால் மழை காலங்களில் பேருந்துக்குள்ளும் குடைகள் தேவைப் படுகின்றன. பயணிகள் கைகளில் குடைகளுடன் அமர்ந்திருந்தால் கூட ஓகே, ஆனால் டிரைவருக்கும் குடை தேவைப்பட்டால்.
மீம்ஸ்...
இவற்றைப் பற்றி சமூகவலைதளங்களில் விதவிதமான மீம்ஸ்களும் உலா வருகின்றன. ஆனால், அதனை அரசோ, போக்குவரத்து கழகமோ கண்டுகொள்வதே இல்லை.
தலைக்கு மேலே அட்டை...
அப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு அரசுப் பேருந்து டிரைவர் தனது இருக்கைக்கு மேலே ஒழுகியதால், ஒரு அட்டையை தலைக்கு மேலே வைத்து கையில் பிடித்தபடி பேருந்தை இயக்கிச் சென்றுள்ளார்.
டிரைவர்களின் கவலை...
சின்ன மழைக்கே இந்தக் கதி என்றால், கனமழை பெய்யும் சமயங்களில் ஏற்கனவே சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். இதில், தலைக்கு மேல் கொட்டும் மழை நீரையும் எப்படி சமாளித்துக் கொண்டு வண்டி ஓட்டுவது என்ற கவலை டிரைவர்கள் மத்தியில் உள்ளது.
கோரிக்கை...
எனவே, கனமழைக்கு முன்னதாகவே பேருந்துகளின் மேற்கூரைகளில் உள்ள ஓட்டைகளைச் சரி செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை ஆகும்.
வழக்கு...
கடந்த 2011-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் புதுக்கோட் டையில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் பயணித்தபோது பேருந்தில் பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் பாதிக்கப்பட்டதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.3 ஆயிரம் நஷ்டஈடும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் போக்கு வரத்துக் கழக நிர்வாகம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.