ரேஷனில் உளுந்து கொடுக்க நிதியில்லை... எம்எல்ஏக்களுக்கு மட்டும் 100 சதவீத சம்பள உயர்வு!
Recommended Video

சென்னை: ரேஷனில் உளுத்தம் பருப்பு விநியோகிக்க நிதியில்லை, போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை தர நிதியில்லை என்று சொல்லும் தமிழக அரசு எம்எல்ஏக்களின் ஊதியத்தை மட்டும் 100 சதவீதம் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏக்கள் அனைவரும் ஏழ்மை நிலையில் இருப்பதாக இதற்கு காரணம் சொல்லும் அரசு மக்களைப் பற்றி சிந்திக்காதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழ்நாட்டின் நிதிநிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அரசின் செலவீனம் சுமார் 10 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது என்கிறார்கள் நிதித்துறை அதிகாரிகள். இன்னோரு பக்கம் மத்திய அரசு கொடுத்துவந்த மானியங்கள் ரத்து அல்லது குறைக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.
போதிய நிதி இல்லாததாலும், விலைவாசி உயர்வாலும், ரேசன்கடைகளில் இனிமேல் உளுந்து வழக்கப்படாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளர். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு வழங்கிவந்த மானியம் ரத்து செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை என்று அமைச்சர் சமாளித்துள்ளார். ஆனால், தமிழக அரசின் நிதிநிலை குறித்த அம்சமாகவும் இதைப் பார்க்கவேண்டியுள்ளது.

ஊழியர்களுக்கு தர நிதியில்லை
அதேபோல், போக்குவரத்து ஊழியர்களின் பிடிப்பு பணமான 7 ஆயிரம் கோடி ரூபாய்யை அரசு தரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசால் வழங்க முடியவில்லை. சரியான நேரத்தில் தரப்படவில்லை என்பதால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மாநிலமே ஸ்தம்பித்தது. ஊழியர்களுக்கு கொடுக்க பணம் இல்லாததால், எஸ்.பி.ஐ வங்கியிடம் 700 கோடி ரூபாயை அரசு கடன் கேட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த செய்தி, தமிழக நிதிநிலையை அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

எம்எல்ஏக்கள் செலவை குறைக்காமல்
ஆனால், அரசின் அடுத்த நகர்வுதான் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. எப்போதெல்லாம், அரசின் செலவீனம் கூடுகிறதோ, அப்போதெல்லாம், மக்கள் பிரதிநிதிகள் தங்களது செலவுகளை குறைத்துக்கொள்ளவேண்டியவது வரும். ஆனால், தமிழகத்தில் நடப்பது தலைகீழ். ஒருபக்கம் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை அரசு 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தியுள்ளது.

சலுகைகளை அனுபவிக்கும் எம்எல்ஏக்கள்
மக்கள் சேவையாற்ற மாதம் 1 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏக்கள் சம்பளமாக பெறுகிறார்கள். போராட்டம் நடத்திவரும் அப்பாவி ஊழியர்களுக்கு கொடுக்க பணம் இல்லாத நிலையில், எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். சம்பள உயர்வு தவிர பயணப்படி என்று பல்வேறு சலுகைகளும் எம்எல்ஏக்களுக்கு உள்ளன.

அத்தியாவசியத்திற்கு முக்கியத்தவம் இல்லை
கடந்த 15 வருடங்களாகவே தமிழக அரசு இலவசங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது. அதே நேரத்தில் அரசின் செலவீனங்களும் அதிகரித்துவருகிறது. ஆனால், அத்தியாவசிய தேவைகளுக்கான செலவை அதிகரிக்கவில்லை என்ற புகார் சொல்லப்படுகிறது. செலவுகளை குறைத்துக்கொண்டு, அத்தியாவசிய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். அதுவே தமிழக நலனுக்கும் நல்லது.












Click it and Unblock the Notifications