அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்த அரசுக் கல்லூரி மாணவிகள்.. குமுதம் செய்திக்குக் கண்டனம்!
சென்னை: நம்பியார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா தொடர்பாக, சென்னை அரசினர் காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான செய்திக்குக் கண்டனம் தெரிவித்து மாணவிகள் அண்ணா சாலையில் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
ஸ்ரீகாந்த் நடித்து தயாரித்துள்ள படம் நம்பியார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இரண்டு அரசுக் கல்லூரிகளைச் சேர்ந்த விடுதி மாணவிகளை அழைத்து வந்து கூட்டம் காட்டியதாக செய்தி வெளியானதாக தெரிகிறது.
இதற்கு அரசினர் காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்களை இழிவுப்படுத்தும் விதமாக செய்தி வெளியானதாக கூறி இன்று பிற்பகலில் அண்ணா சாலையில், திடீரென சாலை மறியலில் குதித்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சாதனைகளை விட்டு விட்டார்களே
இதுகுறித்து மாணவிகள் தரப்பில் கூறுகையில், எங்கள் கல்லூரியில் நிறைய சாதனை பண்ணியிருக்கிறோம். படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் சாதனை புரிந்து நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறோம்.
அதையெல்லாம் விட்டு விட்டு
அப்போதெல்லாம் எங்களையும் பற்றியும், எங்கள் கல்லூரியைப் பற்றியும் எழுத முன் வராத ரிப்போர்ட்டர் பத்திரிகை, தற்போது எங்களையும், பெண்கள் இனத்தையும் இழிவு படுத்தும் விதமாக ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது.
கொச்சைப்படுத்தியுள்ளனர்
ஒரு நிகழ்ச்சிக்கு மாணவிகள் சென்றதை கொச்சைப்படுத்தும் விதமாகவும், எங்களுடைய சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், செய்தி வெளியிட்டிருக்கிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
அரசுக் கல்லூரி என்றால் இளக்காரமா?
எங்கள் கல்லூரி அரசு கல்லூரி என்பதால் தான் இப்படி எழுதியிருக்கிறார்கள். இதுவே ஒரு தனியார் கல்லூரியை பற்றி உங்களால் எழுத முடியுமா? அரசு கல்லூரி என்றால் உங்களுக்கு அவ்வளவு மட்டமா?
கைது செய்யாவிட்டால் போராட்டம் தொடரும்
இந்த செய்தியை எழுதிய ரிப்போட்டரை உடனே கைது செய்ய வேண்டும். கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த இதழில் மன்னிப்பும், இந்த செய்திக்கு மறுப்பும் கட்டாயம் போட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் திங்கள்கிழமை எங்கள் போராட்டம் தொடரும் என்று எச்சரித்துள்ளனர்.