கந்து வட்டியை விட பாஜகவின் ஜிஎஸ்டி மிகக் கொடுமையானது.. ஸ்டாலின் வேதனை
கந்து வட்டியை விட கொடுமையானது ஜிஎஸ்டி என்று வர்ணித்துள்ளார் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின்.
சென்னை: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி, கந்துவட்டியை விட கொடுமையானது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வர்ணித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், மருத்துவமனையில் மருத்துவர்கள் குணப்படுத்த முடியாத நிலையில் ஐசியுவில் கோமா நிலையில் தமிழக அரசு உள்ளது.
நாட்டில் உள்ள மிக கொடுமையான கந்துவட்டி ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்று கூறிய ஸ்டாலின், வணிகர்களும், பொதுமக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செயல்படாத தமிழக அரசால் அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்து வருகின்றனர், அனைத்து பிரச்சனைகளுக்கும் நீதிமன்றத்தையே நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா, ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா என்பதை யோசித்து பார்த்தால் வேதனையாக இருக்கிறது. ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்ட களத்தில் குதித்துள்ள நிலை வேதனைக்குரிய விஷயம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.