உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்... ஜீயரை சந்தித்து எச். ராஜா கோரிக்கை!
ஆண்டாள் சன்னிதியில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை எச். ராஜா நேரில் சந்தித்துள்ளார்.
Recommended Video

ஸ்ரீவில்லிபுத்தூர் : கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சன்னிதியில் மன்னிப்பு கேட்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா நேரில் சந்தித்துள்ளார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ஜீயரிடம் எச். ராஜா கேட்டுக் கொண்டதாக பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆண்டாளை தவறாக சித்தரித்து கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்து மீது இந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. இதனையடுத்து கடந்த மாதத்தில் ஆண்டாள் சன்னிதியில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்த உண்ணாவிரதத்தை இடையிலேயே நிறுத்திக் கொண்டவர் வைரமுத்துவுக்கு பிப்ரவரி 3ம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தார். எனினும் வைரமுத்து நேரில் வந்து மன்னிப்பு கேட்காததையடுத்து நேற்று முதல் ஆண்டாள் சன்னிதியில் ஒற்றை ஆளாக சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இரண்டாவது நாளாக இன்றும் ஜீயர் உண்ணாவிரதத்தை தொடரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இன்று ஜீயரை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று ஜீயரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
ஆண்டாள் பற்றி ஆராய்ச்சி எதுவும் நடத்தவில்லை என்று இண்டியானா பல்கலைக்கழகம் கூறியுள்ளதாகவும். கட்டுரைகளில் முதலில் பெருமை பேசிவிட்டு பின்னர் இகழ்வது வைரமுத்துவின் பாணி என்றும் எச். ராஜா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications