வாக்காளர்களிடம் ரசாயன மாற்றம் நடந்துள்ளது - ஹெச்.ராஜா சொல்லும் புது விளக்கம்
காரைக்குடி: உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் வாக்களிக்கும் மக்களிடம் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பாஜகவிற்கு பெரும்பான்மையான இடம் கிடைக்கும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் ஹெச். ராஜா வாக்களித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழ்நாடு அரசு பணம் இல்லாமல் திவாலாகியுள்ளது. தொடர்ந்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவி நிறத்தில் முகக்கவசம் அணிந்து வருபவர்களை தேர்தல் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்.
இது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். இந்த முறை உள்ளாட்சி நகர்புற தேர்தலில் வாக்களிக்கும் மக்களிடம் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பாஜகவிற்கு பெரும்பான்மையான இடம் கிடைக்கும்'' என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாஜக. இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதால், அதிமுக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தலைவர்களிடம் சர்ச்சைகளைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஆனால், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா திருச்சி பிரசாரத்தில் பேசியது சர்ச்சையானது. ''திமுக அரசுக்கு ஓட்டு போடுபவராக இருந்தால் கோயிலுக்குப் போவது போலி, நெற்றியில் குங்குமம் வைப்பது போலி, மனைவிக்கு கட்டிய தாலி போலி. அதனால், மத நம்பிக்கை இருந்தால், கோயில்களை இடிக்கும் அரசுக்கு உங்கள் எதிர்ப்பை காட்டி ஓட்டு போடுங்கள்'' என்று பிரசாரத்தின் போது பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications