நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழக்கு: தடை விதிக்க கோர்ட் மறுப்பு!
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க கோரும் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
மதுரை : நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மருத்தவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க கோரும் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
இளநிலை மருத்துவ படிப்புகளான ம்பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் தமிழகத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது. தேர்வறைக்குள் செல்ல ஏகப்பட்ட கெடுபிடிகள் மற்றும் தமிழக மாணவர்களுக்கு கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனால் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என அறிவித்துவிட்டு தமிழகத்திற்கு கடினமான கேள்வித்தாளை வைத்து நீட் தேர்வு நடத்தப்பட்டதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, இது குறித்து விளக்கமளிக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரே மாதிரியான வினாத்தாளை நாடு முழுவதும் கொடுக்காதது ஏன் என்பது குறித்தும் சிபிஎஸ்இ விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.