'எமர்ஜென்சி' போல கோட்டையில் போலீஸ் குவிப்பு.... துரத்தியடிக்கப்பட்ட பொதுமக்கள், பத்திரிகையாளர்கள்!!
சென்னை : முதல்வர் ஜெயலலிதா காவல்துறை மானியக்கோரிக்கையை தாக்கல் செய்ய வருகிறார் என்பதற்காக அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் போல தலைமை செயலகமே அல்லோகலப்பட்டது. பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள் வழக்கமாக ஒன்றுகூடும் இடத்தில் இருந்து எங்கே கண்காணாத இடத்துக்கு துரத்தி அடிக்கப்பட்டனர். இந்த களேபரத்துக்கு மத்தியில் கோட்டையை எட்டிப் பார்க்க நினைத்த பொதுமக்கள் பீதியில் உறைந்துபோயினர்.
சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 79 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு மறுநாள் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்களை அனுமதிக்காததால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதன்பின்னர் திமுக உறுப்பினர்கள் போட்டி சட்டசபை கூட்டத்தை மரத்தடியில் நடத்தினர். இதை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. இதனால் துணை கமிஷனர் ஒருவர் அதிரடியாக மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா வைத்துள்ள காவல், தீயணைப்பு மீட்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை நேற்று நடைபெற்றது. இந்த மானியக்கோரிக்கையின்போது கோட்டை வளாகத்திற்குள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான திமுக உறுப்பினர்கள் வந்து போட்டி சட்டசபை அல்லது தர்ணா நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக தலைமைச் செயலகத்தை சுற்றி உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலக வளாகத்துக்குள் எந்த வழியாகவும் வரமுடியாத அளவுக்கு எல்லா வாயிலிலும் போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர். லைட் ஹவுஸ் முதல் பாரிமுனை வரை போலீசார் வரிசையாக நிறுத்தப்பட்டனர். ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பாரிமுனையில் இருந்து தலைமை செயலகம் வரும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையிலும் தடுப்பு அமைத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட எமர்ஜென்சியை போலவே கோட்டை பகுதி காட்சி அளித்தது.
பத்திரிகையாளர்கள் தங்கள் வாகனங்களுடன் தலைமை செயலக வளாகத்துக்குள் நேற்று செல்ல அனுமதிக்கவில்லை. எதிரே உள்ள பூங்காவில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையை கடந்து பார்வையாளர்கள் செல்லும் வரிசையில் செல்லவே அனுமதிக்கப்பட்டனர்.
அதுவும் காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் வந்த பத்திரிகையாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பொதுவாக தலைமை செயலகத்தில் 4ம் எண் நுழைவு வாயில் அருகே பத்திரிகையாளர்களுக்கு தலைவர்கள் பேட்டி அளிப்பது வழக்கம்.
ஆனால் நேற்றோ தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை எதிரே ஏதோ ஒரு மூலையில் தொலைக்காட்சி கேமராமேன்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பத்திரிகையாளர்கள் அறைக்கு செல்லும் கதவும் இழுத்து பூட்டப்பட்டது.
சட்டசபை வளாகத்தின் முதல் மாடியில் பார்வையாளர்கள் சுமார் 200 பேர் அமர்ந்து நிகழ்வுகளை பார்க்க முடியும். பள்ளி குழந்தைகளும் அடிக்கடி வந்து பார்த்து செல்வார்கள். ஆனால் நேற்று யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
இப்படி ஒட்டுமொத்தமாக சட்டசபையில் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அனுபவிக்க நேரிட்டது.