திடீர் மழையால் குளிர்ந்த சென்னை.. புறநகர் பகுதியிலும் கனமழை!
சென்னை: சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாம்பலம், வளசரவாக்கம், ராமாபுரம், அசோக் பில்லர், அடையார், பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் ராமாபுரம் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருவெற்றியூர், பூவிருந்தவல்லி, ஆவடி, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்கிறது. அதேபோல் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.