சென்னையில் பேய்மழை ... இயல்பு வாழ்க்கை முடங்கியது, நீச்சல் தெரிந்தவர்கள் தப்பிக்கலாம்
சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் பெய்துவரும் பேய்மழையால் மாநகரமே வெள்ளத்தில் சிக்கியுள்ளது. சாலைகள் தெரியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தப்பித்தவறி வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் நீச்சல் தெரிந்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் 23ம் தேதி வரை கனமழை கொட்டிய நிலையில் சில நாட்கள் மழைக்கு லீவ் விட்டிருந்தார் வருணபகவான். இதனால் சூரியபகவான் எட்டிப்பார்க்க துணிகளை துவைத்து காயவைத்தனர் இல்லத்தரசிகள். கடந்த 3 நாட்களாகவே கனமழை மீண்டும் சென்னை நகரை தாக்கும் என்று ரமணன் எச்சரிக்க, அச்சத்துடனே மழை சந்திக்க தயாராக இருந்தனர் சென்னைவாசிகள்.
ரமணன் சொன்னது போலவே திங்கட்கிழமை பிற்பகல் மழை தீவிரமடையத்தொடங்கியது. நள்ளிரவில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது.
வெள்ளக்காடான சென்னை
விடாமல் கொட்டி வரும் பேய்மழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் தண்ணீர் சூழ்ந்தது. மழை பாதிப்பில் இருந்து கொஞ்சம் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்த சென்னை வாசிகளை இந்த மழை மீண்டும் புரட்டிப் போட்டுவிட்டது.
மிதக்கும் சாலைகள்
பகலா, இரவா என்று தெரியாத அளவிற்கு இருட்டாக காணப்படுவதால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்பேடு, ஆழ்வார் திருநகர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
வாகனங்கள் மூழ்கின
இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதிகளில் கழுத்தளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கின.
சுரங்கப்பாதையில் வெள்ளம்
சென்னை மாம்பலத்தில் உள்ள துரைசாமி சுரங்க பாலத்தில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீர் அதிகம் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால், அசோக்நகர், தியாகராயநகர் இடையே வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
கிண்டி கத்திப்பாரா பாலம் அருகில் உள்ள ஐ.டி. நிறுவனங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பணிபுரிந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்தே அலுவலங்களுக்கு சென்றனர். கிண்டி சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம் ஆகியவற்றிலும் வெள்ளம் தேங்கியது. ஆளுநர் மாளிகையையொட்டிய சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
|
பயணிகள் அவதி
சென்னை குரோம்பேட்டை பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கு வெள்ளம் போல் மழை நீர் ஓடுகிறது. சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதையும் மழைநீரில் மூழ்கியது. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
|
இயல்பு வாழ்க்கை முடக்கம்
பேய்மழை காரணமாக சென்னை நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், இன்று காலை அலுவலகம் செல்வோர் வெகுவாக பாதிக்கப்பட்டனர். கடந்த 23-ந்தேதி ஏற்பட்டது போன்றே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. இன்று காலையில் அலுவலகங்களுக்கு சென்றிருந்த பலர், நல்ல படியாக மாலையில் வீடு திரும்ப வேண்டுமே என்று வீட்டில் உள்ளவர்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.