வரலாறு முக்கியம்.. அன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனபால் இன்று 18 பேரை தகுதி நீக்கம் செய்தார்!
1988-ல் தகுதி நீக்கத்துக்குள்ளான தனபால் இன்று 18 தினகரன் ஆதரவு எம்,எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: சட்டசபையில் 1988-ல் சபாநாயகர் பி.எச். பாண்டியனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு 27 எம்.எல்.ஏக்களில் ஒருவர்தான் இன்றைய சபாநாயகர் தனபால். இன்று தினகரன் தரப்பு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டிருப்பது வரலாற்றின் விசித்திரம்தான்.
1987 டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். மறைந்தார். இதையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது. பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை ஆதரித்தனர். இதையடுத்து முதல்வராக ஜானகி அம்மாள் பொறுப்பேற்றார்.
ஜானகி அம்மாள் பெருமான்மையை நிரூபிக்க 3 வார கால அவகாசம் தரப்பட்டது. இதனால் 1988 ஜனவரி 28-ந் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபை கூட்டப்பட்டது.
சபாநாயகர் பிஎச் பாண்டியன்
ஜானகி அணியில் 98; ஜெயலலிதா அணியில் 28 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். காலையில் சட்டசபை கூடியதும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாக முதலில் சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன் அறிவித்தார். இதையடுத்து சபையில் அமளி தொடங்கியது.
அமளி
பின்னர் நண்பகலில் சட்டசபை கூடிய போது அடுத்த அதிரடியாக கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட 6 பேரை தகுதி நீக்கம் செய்து பி.எச். பாண்டியன் உத்தரவிட்டார். இதனால் அமளி ஏற்பட சபை ஒத்தி வைக்கப்பட்டது.
27 பேர் தகுதி நீக்கம்
மீண்டும் மாலை 3 மணிக்கு சபை கூடியபோது வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. இந்த அமளிக்கு நடுவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஜானகி அம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் சபைக்கு வராத ஜெயலலிதா ஆதரவு 27 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனபால்
இந்த 27 எம்.எல்.ஏக்களில் தற்போதைய சபாநாயகர் தனபாலும் ஒருவர். அன்று தகுதி நீக்கத்துக்குள்ளான தனபால் இன்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அதிரடியாக 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்.
வரலாற்றின் விசித்திர பக்கங்கள்!