திருவண்ணாமலை: அமைச்சர்களால் அவதிப்பட்ட பக்தர்கள் - இந்துமுன்னணி கண்டனம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்த அமைச்சர்களால் கிரிவலம் வந்த பக்தர்கள் அவதிக்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்களின் இந்த செயலுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த கடந்த 2 ஆண்டுகளாக அரசுப்பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறையும் இக்கண்காட்சிக்கு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அரசின் நலத்திட்ட உதவிகள், நகர்புற வளர்ச்சி, தொழில்வளம், அறிவியல் வேளாண்மை உள்ளிட்ட 27 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி, திரு. முக்கூர் என். சுப்ரமணியன் ஆகியோர் நேற்று பொருட்காட்சியைத் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டனர். இந்த விழாவின்போது, 62 பயனாளிகளுக்கு ரூபாய் 9 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஞானசேகரன், பல்துறை அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நேரத்தில் கிரிவலத்துக்காக லட்சக் கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அப்போது வெளியூர் வாகனங்கள் உள்பட உள்ளுர் வாகனங்களும் நகரத்துக்குள் பயணிப்பதை போலீசார் தடை செய்வார்கள். இந்த மாதமும் நகரத்துக்குள் இருசக்கர வாகனங்கள் முதல் எந்த வாகனத்தையும் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் வியாழன் இரவு 8 மணிக்கு திருவண்ணாமலை பழைய பை பாஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அரசு பொருட்காட்சியை திறந்து வைக்க வந்த அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணி, ராஜேந்திர பாலாஜி இருவரும் திருவண்ணாமலை நகரத்துக்கு வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதையடுத்து நகரத்துக்குள் குறிப்பாக பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையான மாடவீதியில் 30க்கும் மேற்பட்ட கார்களுடன் ஹாரன் சத்தத்தை எழுப்பிக்கொண்டே பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சென்றதாக கூறப்படுகிறது.
ராஜகோபுரம் முன்பும், அம்மனியம்மன் கோபுரம் முன்பும் கார்கள் நின்றதால், போலீசார விலகிச் செல்லுமாறு விரட்டினர். இதனால் பக்தர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. அதிகாரிகள் மீதும், அமைச்சர்கள் மீதும் பக்தர்கள் அதிருப்தியடைந்தனராம். அமைச்சர்களின் இந்த செயலுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.