கொட்டுதே கொட்டுதே தேனீ.. ஹய்யா ஜாலி ஜாலி .. ஸ்கூலுக்கு லீவு.. நெல்லையில் கலகல!
தேனீக்கள் கொட்டியதில் பள்ளி மாணவிகள் படுகாயமடைந்தனர்.
நெல்லை: அரசு விடுமுறையை தவிர்த்து இயற்கை சீற்றம், திருவிழா, போன்றவைகளுக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் நெல்லையில் தேனீக்களால் அரசு பள்ளி மாணவிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.
நெல்லையில் ஜவஹர் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென்று பலமாக காற்று அடிக்க தொடங்கியது.
இதனால், பள்ளியில் இருந்த மரத்தில் நீண்ட நாட்களாக இருந்த பெரிய தேன்கூடு ஒன்று கலைய ஆரம்பித்தது. இதனால் ஏராளமான தேனீக்கள் பறக்க ஆரம்பித்தன. அவை பள்ளியினுள் வட்டமிட தொடங்கியதுடன், வகுப்புக்குள் இருந்த மாணவிகளையும் கொட்டின. அங்கிருந்த ஆசிரியர்களையும் தேனீக்கள் விட்டு வைக்கவில்லை. இதனால் 31 மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர். பின்னர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனை கேள்விப்பட்ட மாவட்ட நிர்வாகம், தேன்கூடுகளை அங்கிருந்த மரங்களை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவினையடுத்து, தீயணைப்புத்துறையினர் பள்ளிகளுள் தேன்கூடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்காக ஜவஹர் அரசு பெண்கள் மேநிலைப் பள்ளிக்கும், இந்தபள்ளி அருகிலேயே இருக்கும் கல்லணை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.