டிஸ்சார்ஜான கௌசல்யா கணவர் சங்கர் வீட்டிற்கே சென்றார்... மேற்படிப்புக்கு உதவ ஜெ.வுக்குக் கோரிக்கை
உடுமலைப்பேட்டை: நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உடுமலை ஆணவக் கொலை சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சங்கரின் மனைவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து சங்கரின் வீட்டிற்குச் சென்ற கௌசல்யா, தனது மேற்படிப்புக்கு முதல்வர் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
உடுமலையில் கடந்த 13ம் தேதி, பரபரப்பான சாலையில் பகல் நேரத்தில் பொதுமக்களுக்கு மத்தியில் சங்கர் - கௌசல்யா ஜோடியை சிலர் வெட்டி வீழ்த்தினர். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக சங்கர் உயிரிழந்தார். கௌசல்யா படுகாயமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிசிடிவி கேமராவில் இந்தக் கொடூரத் தாக்குதல் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாதி மாறி திருமணம் செய்து கொண்டதாலேயே இந்த ஆணவக் கொலை நடைபெற்றிருப்பது அம்பலமானது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனது அப்பா, அம்மா, மாமா உள்ளிட்டோர் மீது கௌசல்யா புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து கௌசல்யாவின் அப்பா, மாமா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, குற்றவாளிகளை அடையாளம் காட்டவும், நீதிமன்றத்தில் சாட்சி கூறவும் சென்று வந்தார் கௌசல்யா.
தொடர்ந்து தனது கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என போராடி வரும் கௌசல்யா, நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கணவர் ஆணவக் கொலைக்கு பலியாக, பெற்றோர் சிறையில் இருக்க, சங்கரின் வீட்டில் சென்று வாழ விரும்புவதாகத் தெரிவித்தார் கௌசல்யா.
இதையடுத்து நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து உடுமலையில் உள்ள சங்கரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கௌசல்யா. தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையால் வீட்டில் முடங்கி விடாமல், தொடர்ந்து படித்து, வேலைக்கு சென்று தனது கணவர் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் கௌசல்யாவின் எதிர்கால லட்சியமாம்.
அதோடு, பள்ளிக்கூட அளவிலேயே சாதிகள் ஒழிக்கப்பட்டால் மட்டுமே சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முடியும் என்று கூறும் அவர், ஆண், பெண் என இரண்டு இனத்தைத் தவிர சாதிகள் வேறெதுவும் இல்லை என்கிறார்.
சங்கரின் தந்தைக்கு வயதாகி விட்டதால், அவரது குடும்பத்தைக் காக்க வேண்டிய கடமை தனக்கிருப்பதாக கூறும் கௌசல்யா, தனது மேல்படிப்பிற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு, எனது கணவர் சங்கர் கொல்லப்பட்டபோது யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது வேதனை தருகிறது. அங்கிருந்த பொதுமக்கள் தடுத்திருந்தால் எனது கணவரை காப்பாற்றியிருக்கலாம். எனது பெற்றோர் கொலை செய்யும் அளவிற்கு கொடுமையானவர்கள் என்பது இப்போது தான் தெரிந்திருக்கிறது. சங்கருக்குப் பதில் என்னை அவர்கள் கொன்றிருக்கலாம்' என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.