கோகுலாஷ்டமி நாளில் கண்ணனை வரவேற்போம்...
சென்னை: கோகுலாஷ்டமி விழாவை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மனிதர்களுக்கு பிறந்தநாள் என்றாலே வீடுகளை அலங்கரித்து தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடுவார்கள். கோகுலாஷ்டமி விழா பகவான் கண்ணன் அவதரித்த நாள் அல்லவா? கடவுள் மனிதராக அவதரித்து அழியாக கீதையை பரிசளித்துள்ளார். அந்த மாயக்கண்ணன் பிறந்தநாளை நாடே உற்சாகமாக கொண்டாடுகிறது. கண்ணன் பிறந்த ஆலயங்களில் அலங்காரம்,தோரணங்கள் களைகட்டியுள்ளன.
எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு.
தர்மநெறி தவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குருசேக்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார்.
இந்த நாளையே கோகுலாஷ்டமி நாளாக ஜென்மாஷ்டமி நாளாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம். வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவர்.
குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டும் அவர்களின் பாதச்சுவடுகளை மாக்கோலமாக கூட இடலாம். இப்படி பாதம் வரைவதற்கு அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது. கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான். ஆழ்வார்கள் கண்ணனின் திருவடியைப் பாடினர்.
நம் வீட்டிலும் பாதச்சுவடுகளை வரைந்து வைத்தால் குழந்தைக்கண்ணன் தன் பிஞ்சு பாதங்களை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நம் வீட்டுக்கு வருவதைப் போல ஒரு தோற்றத்தைத் தரும்.
கண்ணனுக்கு பட்சணங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவல், பொரி, சுகியன்,அப்பம்,தட்டை,வெல்லச் சீடை,உப்புச் சீடை,முறுக்கு, அதிரசம் ஆகியவைகளை படையல் இட்டு வணங்கி குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.