பழைய நோட்டு எவ்வளவுதான் இருக்கு.. சரியா கணக்கு சொல்லுங்க- ரிசர்வ் வங்கியிடம் வங்கி அதிகாரிகள் கேள்வி
500 ரூபாய் நோட்டு பற்றிய தகவல்களை தவறாக ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது என்ற வங்கி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: செல்லாத ரூபாய் நோட்டுக்கள் மொத்தம் எவ்வளவு உள்ளது என்பது குறித்த உண்மையான தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் புதிய நோட்டுக்களை ரிசர்வ் வங்கி, பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுக்காமல் தனியார் வங்கிகளுக்கு கொடுத்து வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 500 ரூபாய் நோட்டுக்கள் பற்றிய உண்மையான தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பு ரூ. 14.6 லட்சம் கோடி என ரிசர்வ் வங்கி தொடக்கத்தில் கூறியது. இந்தப் பணத்தில் 60 சதவீதம் வங்கிகளிலேயே உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி 8 லட்சம் கோடி மதிப்புக்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு சென்று சேர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று 8ம் தேதி அறிவித்த போது 60 சதவீத பணம் வங்கிகளில் இருப்பதாக கணக்கில் வைத்துக் கொண்டால், அதற்கு, பின்னர் மக்களிடம் இருந்த பழைய நோட்டுக்கள் 40 சதவீதம்தான் சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல், புதிதாக வெளியான தகவலின் படி பார்த்தால், 60 சதவீதம் மக்களிடம் இருந்து பணம் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆக, 120 சதவீதம் பணம் தற்போது வங்கிகளில் இருப்பதாக ஆகிறது. அப்படி என்றால் வங்கிகளில் கள்ள நோட்டுக்கள் வாங்கி வைக்கப்படுகிறதா என்றும் வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.