ஆட்சியை கைப்பற்ற பாஜகவின் அடேங்கப்பா 'ஆபரேஷன் திராவிடம்'... இப்படிதான் அரங்கேற்றமாம்!
தென்மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க பாஜக போடும் ஆபரேஷன் திராவிடம் திட்டம் என்ன என்று தெலுங்கு நடிகர் சிவாஜி தெளிவாக விவரித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தென்மாநிலங்களில் கால் பதிக்காத பாஜக கலவரம், ஆட்சிக்கு பங்கம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி அதன் மூலம் மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சிக்கு வருவதே ஆபரேஷன் திராவிடம் என்று புட்டு புட்டு வைத்துள்ளார் தெலுங்கு நடிகர் சிவாஜி.
2014ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் தொடர் வெற்றிகளைக் கண்டு காவிக்கொடி பறக்காத இடங்களிலும் இன்று பாஜக கொடி பறக்கிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உத்திரபிரதேசம், 30 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலங்களையும் தன் வசமாக்கியது.
பாஜக கால் பதிக்க முடியாத இடமாக இருந்து வருவது தென் மாநிலங்களே. தென்மாநிலங்களில் மாநிலக் கட்சிகளை வீழ்த்தி பாஜகவால் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம். பாஜகவின் எதிரிக் கட்சியான காங்கிரஸ் கூட கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிறது.
எதற்காக ஆபரேஷன் திராவிடம்
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் பாஜக வாக்கு வங்கியும் சரியில்லை, செல்வாக்கும் அதிகரிக்கவில்லை. இதற்காகத் தான் 2019 பொதுத்தேர்தல், சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைக் கைப்பற்ற ஆபரேஷன் திராவிடம் என்னும் திட்டத்தை பாஜக போட்டுள்ளதாக தெலுங்கு நடிகர் சிவாஜி கூறியுள்ளார்.
புறவாசல் வழியாக நுழைய முயற்சி
ஆபரேஷன் திராவிடம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தையும் அவர் நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ளார். சிவாஜி சொல்லும் பேட்டியின் சுருக்கம் என்னவென்றால் பாஜக நேரடி அரசியல் செய்யாமல் புறவாசல் அரசியலை இந்த மாநிலங்களில் செய்ய ஸ்லீப்பர் செல்களை உருவாக்கியுள்ளது என்பது தான்.
கட்சி, மக்களிடையே குழப்பம் ஏற்படுத்துவது
மாநிலக் கட்சிகளை கையில் வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் அதிகாரத்தை கைபற்ற வேண்டும். ஒன்றாக இருக்கும் கட்சிகளை உடைத்து, பல ஆண்டுகளாக கட்சியில் விசுவாசமாக இருந்தவர்களை வெளியேற்றி மக்களையும், கட்சியினரையும் ஒரு குழப்பமான மனநிலையிலேயே வைத்திருப்பது தான் ஆபரேஷன் திராவிடம்.
அதிகாரம் என்னும் மீனுக்காக
குழம்பிய குட்டைக்குள் அதிகாரம் என்னும் மீனை பிடித்து விடலாம் என்பது இதன் நோக்கம். இதற்காக ரூ. 4,800 கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருவதாக சிவாஜி கூறியுள்ளார். ஆந்திராவில் சிறப்பு அந்தஸ்து கோரி போராடும் சந்திரபாபு நாயுடு அரசைக் கலைக்கவும், பாஜக தனது சித்துவிளையாட்டை தொடங்கியுள்ளது என்பதும் சிவாஜியின் குற்றச்சாட்டு.
வெற்றி தருமா?
ஆனால் இதனை சுதாரித்ததாலோ என்னவோ சந்திரபாபு நாயுடு தொடர்ந்து தமிழகத்தில் பாஜக பின்வாசல் அரசியல் நடத்துவது போல ஆந்திராவில் நடத்த முடியாது என்று சொல்லி வருகிறார். ஆக சிவாஜி சொல்வது போல பாஜக தென்மாநிலங்களில் ஆபரேஷன் திராவிடம் தனது வேலையைத் தொடங்கிவிட்டது போலத் தான் தெரிகிறது. ஆனால் இதன் வெற்றி எப்படி இருக்கும் என்பதை 2019 தேர்தலே முடிவு செய்யும்.