ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு-100க்கும் மேற்பட்ட வாகனங்களில் புதுக்கோட்டையில் குவிந்த மக்கள்
சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் குவிந்த நெடுவாசல் மக்களால் நகரமே மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.
நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 70 கிராம மக்கள் புதுக்கோட்டையில் குவிந்துள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக உணர்ச்சிகரமான போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் திரண்டதால் நெடுவாசல் சுற்றுப் பகுதிகளில் மக்கள் தலைகளாக மாறிக் காணப்படுகிறது. பல ஆயிரக்கணக்கில் மக்கள் நெடுவாசலில் திரண்டுள்ளதால் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, புதுக்கோட்டையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த சுமார் 100 கிராம மக்கள் முடிவெடுத்து அனுமதி கேட்ட போது புதுக்கோட்டை போலிசார் அனுமதி மறுத்தனர். அதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று தடிகொண்ட அய்யனார் திடலில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
நெடுவாசல் கிராமத்தில் இருந்து மட்டும் சுமார் 50 வேன்கள், மற்றும் 20 க்கும் மேற்பட்ட கார்கள், 100 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். புறப்படுவதற்கு முன்பு நெடுாசலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. நெடுவாசலில் மக்கள் போராட்டத்தை தொடங்கி 100 நாட்கள் ஆக உள்ள நிலையில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக, வாகனங்களை புளிச்சங்காடு கைகாட்டி யில் போலிசார் வாகன சோதனை செய்து அனைத்து வாகனங்களின் பதிவு எண்களையும் எழுதிக் கொண்டு அனுப்பினார்கள்.