விஷாலும் "தமிழர்"தானாம்.. தமிழ்க் குடிமகன்தானாம்.. அவரே சொல்கிறார்!
சென்னை: நானும் தமிழன்தான். தமிழ்க்குடிமகன்தான். சென்னையில்தான் பிறந்தேன் என்று பேசியுள்ளார் நடிகர் விஷால். அதேசமயம் தமிழர்கள், தமிழ்நாடு தொடர்பான எந்தப் பிரச்சினையிலும் நடிகர் சங்கம் தலையிடாது. அது அதன் வேலை அல்ல, அரசின் வேலை, அதைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை என்று போகிற போக்கில் அரசுக்கும் சேர்த்துக் "கொட்டு" வைத்துள்ளார்.
தீபாவளிக்கு முன்பு விஷால் செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் தமிழர்களின் முக்கியப் பிரச்சினைகளான காவிரிப் பிரச்சினை மற்றும் ஈழத் தமிழர் விவகாரம் ஆகிய இரண்டிலும் நடிகர் சங்கம் தலையிடவே தலையிடாது என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இவற்றை தீர்ப்பது அரசின் வேலை. இதில் நடிகர் சங்கம் தலையிட முடியாது என்றும் வி்ஷால் தெளிவாகக் கூறி விட்டார். விஷாலின் பேட்டியிலிருந்து...
காவிரி பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாது
எனது வீட்டு முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. போராடுபவர்கள் முதலில் ஏழைப் பிள்ளைகளை படிக்க வையுங்கள். காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பது அரசு செய்யவேண்டிய வேலை. அதற்கான போராட்டங்களில் நடிகர்கள் தனிப்பட்ட முறையில் பங்கேற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், நடிகர் சங்கம் கலந்து கொள்ளாது. அரசு சார்ந்த விஷயங்களில் நடிகர் சங்கம் பங்கேற்காது. நானும் தமிழன்தான், தமிழ் குடிமகன்தான். சென்னையில்தான் பிறந்தேன். காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவேண்டும் என்பது என் ஆசை.
நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணி
நடிகர் சங்க கட்டட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதற்கான பத்திரத்தை சரத்குமார் எங்களிடம் வழங்கியிருக்கிறார். தற்போது வரவு-செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கட்டுமானப்பணிகள் தொடங்கும்.
நடிகர் சங்க கட்டடம் கட்ட நிதி திரட்ட
எல்லா நடிகர்களும் சேர்ந்து இந்த படத்தை எடுக்க உள்ளோம். டைரக்டர் யார், எந்தெந்த நடிகர்கள் நடிப்பார்கள், என்ன மாதிரி கதை, மொழிமாற்று படமா, நேரடி படமா என்பது பற்றியெல்லாம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். ரஜினிகாந்த்-கமல்ஹாசனுக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் இருந்தால் அவர்களையும் நடிக்க அழைப்போம்.
உங்கள் படத்தில் ராதாரவி?
என் படத்தில் ராதாரவி நடிப்பது டைரக்டரின் முடிவு. கதைக்கு தேவையென்றால் சரத்குமாருடனும் இணைந்து நடிப்பேன். நாங்கள் தேவைப்பட்டால் சந்தித்தும் பேசுவோம். கார்த்தி ஏற்கனவே சரத்குமாரை சந்தித்துள்ளார்.
திருமணம்?
என் திருமணம் இப்போதைக்கு இல்லை. நடிகர் சங்க கட்டடம் கட்டியப்பிறகு திருமணம் செய்துகொள்வேன். எனக்கு காதல் திருமணம்தான் சரிபட்டு வரும். கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்துகொள்வேன். நடிகையை திருமணம் செய்துகொள்வது என்ன தப்பு இருக்கிறது. என்னிடம் ஒளிவு மறைவு கிடையாது. எதுவும் வெளிப்படையாகவே பேசுவேன்.
அரசியல் ஆசை
நடிப்பில் நிறைய சாதிக்க வேண்டியதிருக்கிறது. நடிகர்களுக்கும், நாடக நடிகர்களுக்கும் நல்லது செய்யவே, நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்துள்ளேன். அரசியலுக்கு வரமாட்டேன், தேர்தலிலும் போட்டியிடமாட்டேன் என்றார் விஷால்.