சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம்: சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்
மதுரை: சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உறுதியளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 18நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தது.
இதற்கு முதல் கட்டமாக 9 நீதிபதிகளை தலைமை நீதிபதி கவுல் பரிந்துரைத்திருந்தார். ஆனால் இந்த பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகமாக இருப்பதாகவும் அனைத்து சமூகத்தினருக்கும் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தலைமை நீதிபதி செயல்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருந்தனர்.
இதற்காக போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் மதுரையில் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
நீதிபதிகள் நியமனம் முழுமையாக முடிவடையும் போது எந்த ஒரு சமூகத்தினரும் புகார் கூறமாட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஆண்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்கள் என பார்ப்பது இல்லை... அதனால் எத்தனை பெண்கள் நீதிபதியானார்கள் எனவும் பார்ப்பதில்லை..
பெண் என்பதற்காகவே எவர் ஒருவருக்கும் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது இல்லை.. அவர்களை நான் வழக்கறிஞராகத்தான் பார்க்கிறேன்.. இதுதான் என்னுடைய அணுகுமுறை என்றார்.