அப்படியா? சூலூர் எம்எல்ஏ அணி மாறுவது குறித்து தெரியாதே... திண்டுக்கல் சீனிவாசன்
கோவையில் உள்ள கல்குவாரியை மூடவில்லை எனில், மாற்று அணிக்கு செல்வேன் என்று சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் கூறியது குறித்து எனக்கு தெரியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
பழனி: கோவையில் உள்ள கல்குவாரியை மூடவில்லை எனில், மாற்று அணிக்கு செல்வேன் என்று சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் கூறியது குறித்து எனக்கு தெரியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
கோவையில் சூலூர் அருகே உள்ள கல்குவாரியில் விபத்து ஏற்பட்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெரியகுயிலியில் உள்ள குவாரியில் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் ஆய்வு மேற்கொண்டபோது, இந்த கல்குவாரியில் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கல்குவாரி விபத்து குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
எனவே இந்த கல்குவாரியை மூடவில்லை எனில் நான் மாற்று அணிக்கு செல்வேன் என்று முதல்வர் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெற்ற ஆசிரியர்கள் சங்க மாநாட்டில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீனிவாசன், சூலூர் எம்.எல்.ஏ. மாற்று அணிக்கு செல்வதாக கூறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இரட்டை இலை சின்னமானது சந்தேகமின்றி எங்கள் தரப்பினருக்கு கிடைக்கும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெறுவார் என்றார் அவர்.