மேடையில் பாடும் பாடல்களுக்கு ராயல்டி கேட்கலாமா?
சில வருடங்களுக்கு முன்னர் உன்னி மேனன் மேடையில் பாடிய பாடல்களுக்கு ஏசுதாஸ் தரப்பில் இருந்து காப்பிரைட் சம்மந்தப்பட்ட ராயல்டி கேட்கப்பட்டது. உன்னி மேனன் இதைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
உண்மையில் உலகம் முழுக்கவே, ஒரு குறிப்பிட்ட பாடலையோ அல்லது இசையையோ நீங்கள் பொதுவில் பாட, இசைக்க வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட உரிமையை வைத்திருக்கும் நபரிடம் நீங்கள் பணம் கொடுத்து அந்நிகழ்ச்சிக்காக உரிமை வாங்கத்தான் வேண்டும். அதுதான் நியாயம். அப்படித்தான் உலகம் முழுக்க நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
Pink Floydஇன் பாடல்களை அவர்களிடம் கேட்காமல் வேறொரு குழு பாடிவிட முடியுமா? யோசித்துப் பாருங்கள். ஒரு pubபில் இசைக்கப்படும் லைவ் ம்யூஸிக்குக்கூட நீங்கள் ராயல்டி தரவேண்டும். இதுதான் சட்டம்.
இந்தியாவில் காப்புரிமை சம்மந்தப்பட்ட கடுமையான சட்டங்கள் இல்லவே இல்லை. இதனால்தான் மக்களாகிய நமக்கும் இது புரியவில்லை. இங்கு திருட்டு டிவிடிக்கள், டாரண்ட்கள் ஆகியவை பெருகியதற்கு இதுதான் காரணம். நம்மில் எத்தனை பேரிடம் திருட்டு டவுன்லோட் செய்யப்பட்ட பாடல்கள் உண்டு என்பதை யோசித்துப் பாருங்கள்.
இளையராஜா செய்தது, உலகம் முழுக்க இருக்கும் இசைக்கலைஞர்கள் செய்வதுதான். அதுதான் சரி. காப்புரிமை உங்களிடம் இருந்தால், உங்களைக் கேட்காமல் யாரும் பொதுநிகழ்ச்சிகளில் அப்பாடலைப் பாடக்கூடாது என்பதே சரி.
இளையராஜா, ராயல்டியில் வரும் பணத்தை, இசைக் கலைஞர்கள், பாடகர்கள், பாட்டெழுதியவர்கள் ஆகியோரோடு பகிர்ந்துகொள்வதாகப் பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறார்.
இளையராஜா மேல் வேறு பல விஷயங்களில் இருக்கும் விமர்சனங்களால் நாம் இந்த விஷயத்தில் அவரை எதிர்ப்பது தவறு. ஒரு இசையமைப்பாளராக, தனது பாடல்களின் உரிமையை வைத்திருக்கும் நபராக, அவர் செய்ததில் தவறே இல்லை. அவரை நாம் ஆதரிக்கவே வேண்டும்.
காப்பிரைட் பற்றிய விழிப்புணர்வு இப்படியாவது நம்மிடையே பரவுதல் நல்லது. அதற்கு வித்திட்டிருக்கும் இளையராஜாவை நான் ஆதரிக்கிறேன். அதுதான் சரியும் கூட.
- கருந்தேள் ராஜேஷ்