பீடாக் கடையில் போலீஸாருடன் சண்டை... ஐஏஎஸ் அதிகாரிக்கு முகத்தில் கும்மாங் குத்து
சென்னை: சென்னையில் ஒரு பீடாக் கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஐஏஎஸ் அதிகாரி தாக்கப்பட்டார். பின்னர் அவரை போலீஸார் காவல் நிலையம் கொண்டு சென்று த்திருந்துள்ளனர்.
அந்த அதிகாரியின் பெயர் தர்மேந்திர பிரதாப் யாதவ். இவர் பதிவுத்துறை இயக்குநர் ஜெனரலாக இருக்கிறார். இவர் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பீடா கடைக்குப் போயுள்ளார். அவருடன் அவரது நண்பரும் போயுள்ளார்.
அப்போது யாதவின் நண்பர் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து தனது நண்பருக்கு வாட்டர் பாக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார் யாதவ். பின்னர் பீடா வாங்கியதற்காக, பீடாக் கடையில் ரூ. 1000 ரூபாய்த் தாளை கொடுத்தார். சில்லறைக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு ஒரு போலீஸ்காரர் வந்துள்ளார். 11 மணிக்கு மேல் ஏன் கடையைத் திறந்து வைத்துள்ளாய் என்று கூறி கடையை மூடுமாறு பீடாக் கடைக்காரரை திட்டியுள்ளார்.
ஆனால் போலீஸ்காரரை அடையாளம் தெரியாத யாதவ் பீடாக் கடையை ஏன் மூடக் கூறுகிறீர்கள் என்று கேட்டு சண்டைக்குப் போயுள்ளார். மேலும், போலீஸ்காரரைப் பார்த்து நான் பீடாக் கடைக்காரரிடம் 1000 ரூபாய் தாளைக் கொடுத்துள்ளேன். போய் சில்லறையை வாங்கிக் கொண்டு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்தார் போலீஸ்காரர். அப்போது பார்த்து அங்கு ஒரு போலீஸ் ரோந்து வாகனம் வந்தது. அதில் இருந்த போலீஸார், பீடாக் கடையில் நடந்த வாக்குவாதத்தை வீடியோவில் படம் எடுத்தார்.
அதைப் பார்த்த யாதவ் அதற்கு ஆட்சேபனை தெரிவி்த்தார். அவர் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீஸார் அவரது முகத்தில்குத்து விட்டுள்ளனர். இதில் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியுள்ளது.
பின்னர் யாதவை போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குக் கொண்டு போய் உட்கார வைத்தனர். அப்போது இன்னொரு ஐஏஎஸ் அதிகாரி காவல் நிலையம் வந்துள்ளார். அவர் வந்த பிறகுதான் தாங்கள் பிடித்து கொண்டு வந்தது ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் விடுவித்தனர். அவரும் புகார் ஏதும் தராமல் கிளம்பிச் சென்றார்.