பெண்களின் உயர்கல்விக்கு வேட்டு வைக்கும் கட்டண உயர்வு... ஜெ. இருந்திருந்தால் நடந்திருக்குமா?
பெண்களின் உயர்கல்வியை நசுக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணம் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் நடந்திருக்குமா?
Recommended Video

சென்னை: அரசுப் பேருந்து கட்டணம் அதிகம் பாதித்துள்ளது நடுத்தர வர்க்க மக்களை என்பதைத் தாண்டி கிராமப்புற பெண்களின் உயர்கல்வியை கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதே உண்மையானதாக இருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் பெண்களின் உயர்கல்வியை பாதிக்கும் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்குமா?
அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு அன்றாட வாழ்க்கைக்கு போராடும் கீழ்த்தட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால். ரேஷனில் வழங்கும் சர்க்கரையின் விலை உயர்வு, உளுத்தம்பருப்பு கிடையாது கடையில் ஒரு கிலோ துவரம் பருப்பு விலை ரூ. 100ஐத் தாண்டி, அரிசியின் விலையும் ரூ. 50 வரை இத்தகைய சவாலான நிலையில் தான் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர் சாமானியர்கள்.
கிராமப்புறங்களில் தண்ணீர் இல்லை அதனால் விவசாயம் இல்லை, கூலி வேலைக்காக நகர்ப்புறங்களில் கடைகளில் வந்து பணியாற்றி செல்கின்றனர் பெரும்பாலான கிராம வாசிகள். இவர்களின் அன்றாட போக்குவரத்து செலவு போக மீதத் தொகையை வைத்து தான் குடும்பத்தை நடத்த வேண்டும். இதில் பிள்ளைகளை படிக்க வைக்கும் சுமையும் கூடிக் கொள்கிறது.

உயர்கல்விக்கான செலவு
பள்ளிக் கல்வி வரை அரசுப் பள்ளியில் படிக்கலாம் என்றாலும், உயர்கல்விக்கு கல்லூரிக்கு வரும் போது அவர்கள் குறைந்த பட்சம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரமாவது அரசுக் கல்லூரியில் கட்டணம் கட்ட வேண்டும். இது தவிர தேர்வுக் கட்டணம் கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்லும் பேருந்து கட்டணம் உள்ளிட்டவற்றிற்கும் செலவு செய்ய வேண்டும்.

வேலை செய்து கொண்டே படிக்கும் மாணவிகள்
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்லூரிகளில் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டாலும், அதை வைத்து மட்டுமே ஆண்டு முழுவதும் அவர்கள் படித்து முடித்துவிட முடியாது என்ற நிலை தான். இதனால் வார இறுதிகளில், கல்லூரி விடுமுறை தினங்களில் வேலை செய்து பணம்ஈட்டித் தான் தங்களது படிப்பு செலவை பார்த்துக் கொள்கின்றனர் பெண்கள்.

கல்வி தடைபடும் நிலை
கட்டண உயர்வு தங்களுக்கு கூடுதல் சுமை தான் என்றும் இதனால் பெற்றோர் கல்லூரிக்கே அனுப்பாமல் நிறுத்திவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தங்களின் எதிர்காலத்தை எண்ணி போராட்ட களத்தில் குதித்துள்ளனர் கல்லூரிப் பெண்கள். கல்லூரிப் பெண்கள் என்றாலே ஜாலியாக பொழுதை போக்க வருபவர்கள், ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுபர்வர்கள் என்று சினிமாவில் வரும் கற்பனைகளை மட்டுமே பார்த்து விமர்சிக்காமல் இவற்றைத் தாண்டி தாங்கள் எத்தனை போராட்டங்களைக் கடந்து தான் கல்லூரிக்கு வந்து செல்வதை உணர்த்துகின்றனர் வீதிகளில் இறங்கி கூக்குரலிடும் இளம் பெண்கள்.

பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள்
பள்ளி மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து வந்து கல்வி பயில்வது கஷ்டம் என்பதால் தான் அவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தையும், கிராமப்புற மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதில்லை என்பதை சமன் செய்யவே சத்துணவில் வாரம் இருமுறை முட்டை, கலவை சாதம், சுண்டல் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவித்தார் ஜெயலலிதா.

அரசின் அறிவிப்பால் பாதிப்பு
பெண்களின் முன்னேற்றத்திற்காக எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டவர் என்று போற்றப்பட்டவர் ஜெயலலிதா அதனால் தானோ என்னவோ கடந்த முறை தேர்தல் வாக்குறுதியில் கூட வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்று அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது பெண்களின் கல்லூரி கனவை சிதையும் நிலைக்கு போயுள்ளது, ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இது போன்ற பெண்களை பாதிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்குமா?

கட்டணத்தில் சலுகை
ஜெயலலிதா பெயரால் ஆட்சி செய்யும் அதிமுக அரசு கல்லூரிப் பெண்கள் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களின் சுமையை குறைக்கும் வகையில் கட்டண உயர்வை திரும்பப் பெறுமா. அல்லது பெண்களுக்கென தனியான சலுகைகள் ஏதேனும் அறிவித்து அவர்களுக்கு நிம்மதி பெருமூச்சு அளிக்குமா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications