தெளிவற்ற கொள்கைகள்.. தலைவிரித்தாடும் லஞ்சம்.. தமிழகத்தை விட்டு ஆந்திராவுக்கு ஓடும் தொழிற்சாலைகள்!
தமிழக அரசிடம் நிலையான பொருளாதார கொள்கைகள் இல்லாத காரணத்தால் ஆந்திரா, கர்நாடகா என்று அண்டை மாநிலங்களுக்கு நிறைய தொழிற்சாலைகள் இடமாறிவிட்டன என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக அரசிடம் உருப்படியான பொருளாதார கொள்கைகள் இல்லாத காரணத்தாலும், புதியதாக தொழில் தொடங்க தமிழகம் வரும் நிறுவனங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக அண்டை மாநிலங்களுக்கு, தமிழகத் தொழிற்சாலைகள் ஓட்டமெடுத்து வருகின்றன.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே தமிழகத்திற்கு வந்த தொழில் நிறுவனங்கள், இங்கு முறையான ஏற்பாடுகள் அணுகுமுறைகள் வசதிகள் இல்லையென்று கர்நாடகா மாநிலம் நோக்கி சென்றுவிட்டன. அது தொடர்பாக ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் பல முறை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தவும் செய்தன.
அதனால் ஜெயலலிதா இருந்தபோதே, ஒரே ஒருமுறை சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, அதிமுக அரசு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தது. ஆனாலும் அவர்கள் கூறிய அளவுக்கு தமிழகத்தில் முதலீடுகள் வந்து குவியவில்லை. இப்போதும் அதே நிலைதான் நீடிக்கிறது என்று கொதிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
கடந்த ஆண்டில்கூட, கோவையில் தொடங்கவேண்டிய ஏராளமான தொழில் நிறுவனங்கள் பெங்களூருவுக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடக மாநில தொழிற்துறை அமைச்சர் சார்பில் கோவையில் மாநாடுகூட நடத்தப்பட்டது. இதே நிலை இப்போதும் நீடிக்கிறது.
ஆந்திராவுக்கு ஓடிய கார் தொழிற்சாலை
சென்னை ஒரகடத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய கார் தொழிற்சாலை தொடங்க இருந்தது, கடைசி நிமிடத்தில் அது ஆந்திரா போய் விட்டது. தொழிற்சாலைக்கு ஒதுக்கிய அரசு நிலத்துக்கு ஈடாக மொத்த முதலீட்டில் பாதி தொகையை, லஞ்சமாக கேட்டதே காரணம் என்கிறார்கள்.
அரசை ஆட்டிப்படைக்கும் லஞ்ச பேரம்
கார் தொழிற்சாலை மட்டுமல்ல எதுவாக இருந்தாலும் 'கட்டிங்' போடுகிறார்களாம் அமைச்சர்கள். அண்மையில் கூட தென்கொரிய கார் நிறுவனத்திடம் ‘மெகா' லஞ்ச பேரம் நடந்துள்ளது. அதில் கடும் அதிர்ச்சி அடைந்த தென் கொரிய கார் நிறுவனத்துக்கு ஆந்திர அரசு எல்லா சலுகைகளும் தந்து அழைக்க, தமிழகத்துக்கு எண்ட் கார்டு போட்டுவிட்டு எஸ்கேப்பானது அந்த நிறுவனம்.
பெருகும் வேலையில்லா திண்டாட்டம்
இன்னொரு தொழில் நகரமாக வேகமாக வளரவேண்டிய ஒரகடம் இப்போது தேங்கிக் கிடக்கிறது. அதனால் லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விட்டன. சென்னையை அடுத்த மறைமலை நகரில் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களான மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஹூண்டாய், ரெனால்ட் நிசான், அசோக் லேலாண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலை அமைத்துள்ளன. இதே போல ஒரகடம் மாறும் என்ற எதிர்பார்ப்பு இப்போது வீணாகியுள்ளது.
பல ஆயிரம் கோடி லஞ்சம் கேட்ட அமைச்சர்
திருபெரும்புதூர் பகுதியில் செயல்படும் ஹூண்டாய் கார் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனம் மேலும் ஒரு தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டது. இது தொடர்பாக தென்கொரியாவில் உள்ள அதிகாரிகள் 3 இடங்களை தேர்வு செய்தனர். அவர்களின் முதல் விருப்பம் ஒரகடம். தமிழக தொழிற்சாலைத்துறை செயலாளரையும் தொடர்பு கொண்டனர். மேலும் சிப்காட் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் திட்டம் குறித்து கேட்டறிந்தனர்.
அதிர்ச்சி அடைந்த கியா
அப்போது ரூ. 7060 கோடி மதிப்பில் புதிய கார் தொழிற்சாலை அமைக்க அனுமதிகளையும் உடனடியாக அதிகாரிகள் வழங்கினர். இறுதியில் நிலத்தின் திட்ட மதிப்பீட்டில் பாதி தொகையை லஞ்சமாக ஆளும் வர்க்கத்தினர் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த கியா நிறுவனம் தமிழகத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தையே கைவிட்டு விட்டது.
ஆந்திராவுக்கு ஓட்டம்
கியா நிறுவனம் பற்றி அறிந்துகொண்ட ஆந்திர அரசு அதை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர பல்வேறுகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தமிழகத்திடம் கேட்ட அத்தனை வசதிகளையும் இலவசமாக செய்து தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதனால் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை கியா அமைக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சென்னைக்கு வர வேண்டிய ரூ.60 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திர மாநில ஸ்ரீசிட்டிக்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல போர்டு நிறுவனம், ஜப்பான் இசுசு நிறுவனம், ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம்,பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டோம் நிறுவனம் ஆகியவை அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.